ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

ஓடும் பேருந்தில் ஒருநாள்




பஸ்ஸுக்குக் காத்திருக்கையில்
பரிதாபமாக ஒருகுரல்
“ஏதாச்சும் போடுங்கய்யா”.
கிழிந்த உடையில்
கூனல் கிழவன்
கெஞ்சி நின்றான்.


சிறிதுநேர யோசனைக்குப்பின்
“சில்லறை இல்லை”
சொல்ல, சென்றான்.



போஸ்டரில் திரிஷா
புன்னகை பார்க்கையில்
“பிள்ளை அழுவுதய்யா,
பெரியமனசு பண்ணுங்க”
அழும் குழந்தையுடன்
அழுக்காய் ஒருபெண்
அலுமினியத் தட்டேந்தி.


‘பிள்ளை பெற்றதா,
பிடித்து வந்ததா?’
சந்தேகித்துச் சொன்னேன்
“சில்லறை இல்லை”.



விருட்டென் பஸ்வர
விரைந்து ஏறினேன்.
காலை மிதித்து
தோளில் இடித்து
இடத்தைப் பிடித்து
அப்பாடா என்கையில்,
மடியில் நோட்டீஸ்.



சினிமாக்கதை போலொரு
சோகக்கதை அச்சில்.
வெறுமனே நோட்டீசைத்
திருப்பிக் கொடுக்கையில்
‘தர்மம்’என்றான் சிறுவன்,
சலிப்பாய் சொன்னேன்
“சில்லறை இல்லை”.


பேருந்து புறப்பட்டதும்
பத்துரூபா கொடுத்ததில்
கண்டக்டர் தந்தது
ஒன்பது ரூபாய்க்கு
டிக்கெட் மட்டும்.


மீதியை வாங்க
ஏகமாய் வழிந்து
‘சேஞ்ச்’என இழுத்ததும்
கடுப்பாய்ச்சொன்னர் கண்டக்டர்
“சில்லறை இல்லை”.

-    பத்மன்






2 கருத்துகள்: