வியாழன், 23 ஆகஸ்ட், 2012

சோராமல் தமிழுக்கு உழைத்த சேரத் தமிழர்




நெருங்கிப் பழகியவரின் மரணத்தைவிட நேரிலேயே பார்க்காத ஒருவரின் மரணம் நம்மை நிலைகுலையச் செய்தால், அவர் எப்படிப்பட்ட மனிதராக இருந்திருக்க வேண்டும்? அப்படியொரு வியத்தகு, போற்றுதலுக்குரிய மனிதர்தான், கொச்சி தமிழ்ச் சங்கத்தின் தலைவரும், சேரத் தமிழ் காலாண்டு இதழின் ஆசிரியருமான  மேலைச்சிவபுரி திரு. அ.சொ. சிவப்பிரகாசம் அவர்கள்.


புதுக்கோட்டை மாவட்டம் மேலைச்சிவபுரியில் பிறந்து, கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு புலம் பெயர்ந்த திரு அ.சொ., அங்கே தமிழ் பலம் பெற ஐம்பது ஆண்டுகாலம் அயராது உழைத்தவர். 140 ஆண்டுப்  பழமை வாய்ந்த எர்ணாகுளம் பொது நூலகத்தில், தமிழுக்கென ஒரு தனி நூலகப் பிரிவு நிறுவப்படக் காரணமானவர். மேலும் அந்த நூலகத்திற்கு ஆயிரக்கணக்கான தமிழ் நூல்களை அன்பளிப்பாக வழங்கியவர். 


எர்ணாகுளத்தில் (கொச்சியில்) 22 தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்து அனைத்துக் கேரளத் தமிழ்ப் பேரவையை உருவாக்கியவர்.
கேரள மண்ணுக்குப் பல தமிழறிஞர்களையும் தமிழன்பர்களையும் வரவழைத்து விருந்தோம்பல் செய்தவர். தமிழ்ச் சேவைக்காக காரைக்குடி கண்ணதாசன் ஆய்வு மையத்தின் நற்பணி நாயகர் விருது, தமிழறிஞர் சோமலெ நினைவு விருது, புதுக்கோட்டை இலக்கியப் பேரவையின் தமிழ்ப் பணிச் செம்மல் விருது உள்ளிட்ட விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றவர்.


அத்தகு பெருமை வாய்ந்த திரு. அ.சொ. அவர்கள் காலமானார்கள் என்ற தகவலை, அவருடன் கொச்சியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து தமிழ் வளர்ச்சிப் பணியாற்றியவரும், கொச்சி தமிழ்ச் சங்க முன்னாள் துணைத்தலைவரும், கொச்சி முத்தமிழ் மலர் முன்னாள் ஆசிரியருமான திரு. பி. வெங்கட்ராமன் (பி.வி.) அவர்கள் மிகுந்த துயரத்துடன் கூறியபோது, என்னை அறியாமேலேயே என் கண்கள் பனித்தன. ஏனெனில், கார்கில் போரின்போது தினமணியில் நான் எழுதிய கவிதையை, என்னை யாரென்று அறியாமலேயே, நன்றி தினமணி என்று குறிப்பிட்டு சேரத் தமிழில் அப்படியே மறு பிரசுரம் செய்து பாராட்டிய பெருந்தகை திரு. அ.சொ.



என்னைப்போலவே பல தமிழன்பர்களையும் இதுபோல் தனக்கு அறிமுகம் இல்லாதபோதிலும்  கேரளத்தில் (எழுத்து வடிவில்) அறிமுகம் செய்துவைத்த பேரன்பாளர் திரு. அ.சொ. அவர் காலமானார் என்ற செய்தி தந்த துக்கத்தைவிட, அவர் காலமான விதம், அனைவரது மனத்திலும் அவர் மீது ஏற்படுத்திய மரியாதையே அதிகம். ஈசன் திருவடி உறைந்திருக்கும் கைலாயத்தைக் காணச் சென்றவர், கடந்த ஜுன் 13-ம் தேதி, நேரே ஈசன் திருவடிகளிலேயே இணைந்துவிட்டார். பூத உடலோடு கைலாயம் செல்கின்ற பேறு யாருக்குக் கிடைக்கும்?


தமிழையே உயிர்மூச்சாகக் கொண்டிருந்தவரின் உயிர்மூச்சு நின்றுவிட்ட போதிலும் அவர் ஏற்படுத்திய உணர்வு மூச்சு அடங்காது அல்லவா? அதனை வெளிப்படுத்தும் விதமாக, சென்னை நங்கைநல்லூரில் திரு. அ.சொ. சிவப்பிரகாசனாரின் நினைவேந்தல் நிகழ்ச்சியை, அவரது குடும்பத்தாரோடு இணைந்து, கடந்த ஜூலை 7-ம் தேதி செவ்வனே நடத்தினார் திரு. பி.வி. நிகழ்ச்சியின் அமைப்பாளராக மட்டுமின்றி தொகுப்பாளராகவும் அயராமல் செயல்பட்டார் திரு. பி.வி. 



அந்த விழாவிலே இறைவணக்கம் பாடவும் திரு. அ.சொ. சிவப்பிரகாசம் அவர்களின் தமிழ்ப் பணி குறித்துப் பேசவும் எனக்குக் கிடைத்த வாய்ப்பு, எனது பாக்கியம்.



முதலில் கவிதாஞ்சலி செலுத்திய கவிமாமணி திரு. எதிரொலி விஸ்வநாதன் அவர்கள், திரு. அ.சொ. அவர்களை, கேரளத்தில் மற்றொரு இளங்கோவாய் மறுபிறவி எடுத்தவர் என்றும் திரிதிரியாய் பிரிந்திருந்த சேரத் தமிழ் அமைப்புகளை திருவண்ணாமலை தீபமாய் இணைத்த ஜோதி என்றும் மிகப் பொருத்தமாய் புகழ்ந்துரைத்தார்.



இந்த நினைவஞ்சலிக் கூட்டத்தில் கல்கண்டு ஆசிரியர் திரு. லேனா தமிழ்வாணன் அவர்கள் பங்கேற்று கல்கண்டுத் தமிழில் சிறப்புரை ஆற்றினார். “எல்லோருக்கும் நல்லவராக இருப்பது யாருக்கும் சாத்தியமல்ல என்ற கருத்தைப் பொய்யாக்கும் வகையில் வாழ்ந்து காட்டியவர் திரு. அ.சொ. அவர்கள். நான் பிரபலமாகாத புதிதில், கொச்சி தமிழ்ச் சங்க விழாவில் தமிழறிஞர் திரு. சோமலெ-வுடன் சேர்த்து என்னையும் சிறப்புரையாற்ற அழைத்து, நன்கு உபசரித்த பண்பாளர். அண்ணல் காந்தியடிகள், தமது வாழ்வே தாம் சொல்லும் செய்தி என்று கூறியதற்கிணங்க வாழ்ந்து காட்டியவர் திரு. அ.சொ”  என்று புகழாரம் சூட்டினார்.



இதேபோல் சிறப்புரை ஆற்றிய சிறந்த பட்டிமன்றப் பேச்சாளர் திருமதி. சரஸ்வதி இராமநாதன் அவர்கள், திரு. அ.சொ-வின் பண்பு நலன்களைப் பட்டியலிட்டார். திரு. அ.சொ-வின் மறைவால் தம் நெஞ்சம் கனத்தபோதிலும் அவரது அரும்பணிகளை தமிழர்களின் நெஞ்சங்களின் பதிவு செய்யவேண்டும் என்பதற்காகவே இந்தக் கூட்டத்தில் பங்கேற்றதாகக் கூறினார்.



கேரளத்தில் பிரிந்து கிடந்த 22 தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்தவர் – கொச்சியில் காகித வியாபாரம் செய்து வந்த திரு. அ.சொ. அதனைத் தாண்டி, நல்ல தமிழ் கருத்துகளைக் காகிதங்களில் பதிவு செய்தவர்- புகழ்ச்சியிலே துள்ளாமலும் இகழ்ச்சியிலே துவளாமலும் நடுநிலையோடு, நிறைவோடு வாழ்ந்தவர் என்றெல்லாம் எடுத்துரைத்தார்.


நேரில் பழகாத போதிலும் கடிதங்கள் மூலமும், நண்பர்களின் கருத்துகள் மூலமும் தங்களுக்குச் சிறந்த நண்பராக விளங்கிய திரு. அ.சொ-வின் நினைவுகளை, பாரதி கலைக் கழகத்தின் நிறுவனர் திரு. பாரதி சுராஜ், திருவள்ளுவர் இலக்கிய மன்ற நிறுவனர் திரு. கோ. பார்த்தசாரதி ஆகியோர் இக்கூட்டத்தில் பகிர்ந்து கொண்டனர். 


திண்ணை ராமாயணம் புகழ் திரு. கீரனூர் ராமமூர்த்தி, கவிமாமணி திரு.புதுவயல் செல்லப்பன், அரிமா திரு. முரளிதரன், விமர்சகர் இளசை திரு. கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோரும், தங்களுடன் நேரில் பழகாமலேயே தங்கள் மனத்தைக் கவர்ந்த திரு. அ.சொ-வின் பெருமைகளை எடுத்துரைத்தனர்.


நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்த கவிஞர் திரு. மன்னை பாசந்தி,தகவல் முத்து ஆசிரியர் கவிஞர் திரு. நீரை அத்திப்பூ, மேலைச்சிவபுரி நகரத்தார் சங்கப் பிரதிநிதி திரு. ராமநாதன் ஆகியோர் கவிதாஞ்சலி செலுத்தினர்.



தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது என்றார் வள்ளுவப் பெருமான். தமிழர்களின் மனக்கவலையை மாற்ற தளராமல் தொண்டு செய்துவந்த திரு. அ.சொ., தனக்குவமை இல்லாதான் தாளை, கைலாய யாத்திரை மூலம், நேரடியாகவே சேர்ந்துவிட்டார். பூத உடலை உதிர்த்துவிட்டாலும், அவரது புகழுடம்பு நிலைத்துநின்று, நமது தமிழ்ப் பணிகளுக்கு உதவட்டும்.

- பத்மன் 


1 கருத்து: