வியாழன், 13 டிசம்பர், 2012

சில்லறை விஷயம் அல்ல




“கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ?” என்று கேட்டார் மகாகவி பாரதியார். இனி சிரிக்க வழியின்றி அழுகைக்கு மட்டுமே உத்தரவாதமாய் இந்தக் கொடுமை அண்மையில் இந்தியத் திருநாட்டில் அரங்கேறியிருக்கிறது, சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி என்ற பெயரில். நாட்டின் இறையாண்மை, பொருளாதார சுயபலம் இரண்டையும் காவு கொடுத்துவிட்டு அன்னிய நாட்டு ராட்சத “வால்”மார்ட்டுகளை வரவழைத்திருக்கிறது மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு.


நாடாளுமன்றத்தில் இது தொடர்பான வாக்”கெடுப்பில்” மத்திய அரசு நடந்துகொண்ட விதமே, இந்திய ஜனங்கள் இவர்களது பார்வையில்  விற்பனைப் பொருள்கள் என்பதற்கு கட்டியம் கூறிவிட்டது. ஜெயிக்க மாட்டோம் என்ற அச்சத்தில் இருந்தபோது ஒரு பதுங்கல், ஆட்களைச் சரிகட்டி ஜெயம் நிச்சயம் ஆனவுடனேயே ஒரு பாய்ச்சல் என அரசியலில் தான் ஒரு புலி என்பதை காங்கிரஸ் நிரூபித்துவிட்டது. மத்தியக் கூட்டணி அரசுக்கு முதலில் எதிர்ப்பு காட்டிவிட்டு, பிறகு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒட்டிக்கொண்ட, தி.மு.க., சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய அவியல் கட்சிகள், நரிகளா, விலாங்கு மீன்களா, பச்சோந்திகளா, என்ன வகை ஜீவராசிகள் என்பதுதான் தெரியவில்லை.

அது கிடக்கட்டும். இந்திய மக்களின் தலையில் மத்திய அரசால் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டுள்ள மற்றொரு காலனி ஆதிக்கமான அன்னிய நேரடி முதலீட்டின் விளைவுகளை சற்று நினைத்துப் பார்ப்போம். உழைத்து உழைத்து ஓடாய்ப் போகும் விவசாயிகளுக்கு, விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லையே என்ற காரணத்துக்காகத்தான், அன்னிய ராட்சத நிறுவனங்களை சில்லறை வணிகத்தில் அரசாங்கம் அனுமதிக்கிறதாம். “கேப்பையில் நெய் ஒழுகுகிறது” என்பார்களே அது, இதுதான்.


இதனோடு உபரியாக, மலிவு விலையில் மக்களுக்கு, தரமான பொருள் கிடைக்குமாம். ஆரோக்கியமான தொழில் போட்டி ஏற்படுமாம். புதிய தொழில்நுட்பங்கள் எல்லாம் இந்தியாவுக்குள் புகுந்துகொள்ளுமாம். வேலைவாய்ப்பு வெகு பிரகாசமாய் உருவெடுக்குமாம். பூவை அல்ல பூந்தோட்டத்தையே காதில் சுற்றுகிறார்கள்.

முதல் விஷயம், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும், இடைத்தரகர்கள் நீக்கப்படுவார்கள் என்பதை எடுத்துக்கொள்வோம். சில்லறை வணிகத்தில் இறங்கும் அயல்நாட்டு ராட்சத நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து அறுபது சதவீத விளைபொருட்களை வாங்க வேண்டும் என்று விதிமுறை வகுக்கப்பட்டிருப்பதை இதற்கு வாகாக சுட்டிக் காட்டுகிறார்கள். மேலும், இந்த விளைபொருட்களை காப்பாற்றி, சேமித்து வைக்க பெரிய அளவிலான குளிரூட்டப்பட்ட கிடங்குகளை இந்த நிறுவனங்கள் அமைக்கும் என்றும் கூறுகிறார்கள்.


சரி, அப்படியே வைத்துக்கொள்வோம். இடைத்தரகர்களை ஒழித்துவிட்டாலும்கூட, விவசாயிகளிடமிருந்து நல்ல விலைக்குத்தான் விளைபொருட்களை வாங்குவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? மலிவு விலையில் வாங்கி, அதிக அளவுக்கு விற்பதன் மூலம் மிகுந்த லாபம் ஈட்டுவதே இதுபோன்ற ராட்சத நிறுவனங்களின் வியாபார தாரக மந்திரம். நாடு முழுவதும் கிளைபரப்பி ஏகபோகம் செய்யும் இதுபோன்ற மகா மெகா நிறுவனங்களிடமிருந்து விவசாயிகளுக்கு மிகுந்த கூலி அல்லது கூடுதல் விலை கிடைக்க என்ன வழி?

விவசாயிக்கு கட்டுப்படியாகாத விலையை இந்நிறுவனங்கள் கொடுக்க முன்வந்தால் அரசு தலையிடுமா? உரிய விலை கிடைக்க என்ன உத்தரவாதம்? அரசு தலையிடுமென்றால் வியாபார சுதந்திரம் பறிபோனதென்று கூக்குரல் எழுமே? அமெரிக்காவிலிருந்து ‘சற்றே விலகியிரும் பிள்ளாய்’ என்று கட்டளைக்குரல் வருமே? இதுபோன்று தலையிடலாமென்றால் இப்போதுள்ள நடைமுறையிலேயே இதனைச் செய்யலாமே?


அதுசரி, நவரத்தினங்கள், மகாரத்தினங்கள் போன்ற மத்திய அரசு நிறுவனங்கள் மூலம் பல லட்சம் கோடி ரூபாய் உபரிப் பணம் வைத்திருக்கும் மத்திய அரசுக்கு சர்வதேசத் தரத்தில் குளிர்பதனக் கிடந்குகளைக் கட்டி, நிர்வகிக்கத் தெரியாதா? அதற்கெனவே நாடு தழுவிய பெரிய அரசு நிறுவனத்தை அமைக்க இயலாதா? ஹூம், ஏற்கெனவே இருக்கும் கிடங்குகளிலேயே எலிகள் ஏறி விளையாடுகின்றன, தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் மூட்டைகளில் கேட்பாரின்றி முளைவிட்டுச் செடிகள் முளைத்து தானியங்கள் மக்கி வீணாகின்றன. இந்த லட்சணத்தில் அரசே குளிர்பதனக் கிடங்கு நடத்துவதா? என்று வினவலாம். ஆயிரம் குறை இருந்தாலும் அதனைக் களைவதை விட்டுவிட்டு, அன்னியர் புகுவதற்கு அனுமதிப்பது என்ன நீதி?

இடைத்தரகர்களின் கொட்டத்தை ஒடுக்க வேண்டுமென்றால், சந்தைப்படுத்தும் முகமையை (மார்க்கெட்டிங் ஏஜென்சி) அரசே அமைக்கலாமே? விவசாய விளைபொருட்களை நல்ல விலைக்கு வாங்கி பாதுகாத்து விற்கின்ற நிறுவனத்தை அரசே பெரிய அளவில் நடத்தும்போது, இதற்கென ஓரளவு கூடுதல் கட்டணம் வசூலித்துக் கொண்டாலும்கூட, சாமானிய மக்களுக்கு தரமான பொருட்கள், கொள்ளை லாபம் அடிக்கும் தரகுக் கூட்டம் இல்லாததால், மலிவு விலைக்குக் கிடைக்குமே? மறுபுறம், விவசாயியும் உரிய பலன் பெறுவாரே? புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகுமே?

மேலும், அரசியல் தலையீட்டாலும், கட்டாயக் கடன் தள்ளுபடி மேளாக்களாலும், ஊழல்களாலும் தள்ளாடிக் கிடக்கும் கூட்டுறவு அமைப்புகளை சீர்படுத்தி இதுபோன்ற செயல்களுக்குப் பயன்படுத்தினால் எல்லாத் தரப்பினருக்கும் எவ்வளவு நன்மை? வெற்றிகரமான “அமுல்” வரலாறு ஏன் மற்ற துறைகளிலும் அமலாகவில்லை? குரியன்கள் ஏன் குறுகிப்போனார்கள்?


மத்திய அரசாங்கமும், அன்னிய (முதலீட்டு) ஆதரவாளர்களும் பல்வேறு காரணங்களைக் கூறினாலும், சில்லறை வணிகத்திற்குப் பதில், wholesale எனப்படும் மொத்தக் கொள்முதல் வியாபாரத்தில் அவர்களை இறக்கி விட்டிருந்தாலும் ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம். சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு என்பது, இந்தியப் பொருளாதாரத்திற்கு நேர் அடிதான் என்பதில் சந்தேகமில்லை.

பல்லாயிரக்கணக்கான உண்மையான சில்லறை வியாபாரக் கடைகள், இந்த அன்னிய பகாசுர சில்லறை நிறுவனங்களால் கபளீகரம் செய்யப்பட்டு கல்லறைக்குப் போய்விடும். இதற்கென ஒரு மேல்தட்டுக் கூட்டம்தான் போகும், நடுத்தர, சாமான்ய மக்கள் சிறிய கடைகளுக்குத்தான் செல்வார்கள் என்று சப்பைக்கட்டு கட்டப்படுகிறது. காரில் வந்து இறங்கும் வெறும் மேல்தட்டுக்கு மட்டுமே கடை விரிக்க, அன்னிய நிறுவனங்கள் என்ன மேல்மாடி காலியான நிறுவனங்களா? அய்யா, இந்தியா உலகின் மிகப் பெரிய வியாபார சந்தை அய்யா, அந்தக் காலத்திலும் சரி, தற்காலத்திலும் சரி. திரும்பத் திரும்ப வெளிநாட்டு வியாபாரிகளிடம் தானே ஏமாந்துபோகிறோம்? சரித்திரத்தைச் சரியாகப் படிக்காத தரித்திரங்கள் நாம்!


மலிவு விலை விற்பனைக்காக, இந்திய விவசாயியும் குறைவான விலை மட்டுமே கிடைத்து நலிவடைவான். மேலும், இருக்கவே இருக்கிறார் சின்ன அண்ணன் சீனா. என் கடன் ஏனென்று கேட்க நாதியில்லாமல் வேலை செய்துகொண்டே இருப்பதே என்று வாழும் வாயில்லா ஜீவன்களான அப்பாவி மனிதர்கள் நிரம்பி வழியும் சீனா, மலிவு விலைப் பொருட்களை, பெரிய அண்ணன் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள் மூலம் இந்தியாவில் நிரப்பிவிடும். பின்னர் ஒவ்வொன்றாக இந்திய உற்பத்தி நிறுவனங்களுக்கும் மூடுவிழா காணவேண்டியதுதான். அப்புறம் ஏதோ சொன்னார்களே, வேலைவாய்ப்பு அதிகரிப்பு, அது வெறும் பகல்கனவுதான். வெளிநாட்டு விற்பனை நிறுவனக் கடைகளின் சிப்பந்திகள் எண்ணிக்கை வேண்டுமானால் ஏதோ சற்று கூடலாம். ஆனால், அயல்நாட்டுப் பொருட்களின் தாராள வருகையால் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டு, பல வேலைவாய்ப்புகள் பறிபோகும். அத்துடன், சுயதொழிலும் சுருங்கிப் போகும். சொந்தக் கடைக்கு  முதலாளிகளாக இருந்தவர்கள், இனி வந்த கடைக்கு ஊழியர்களாகப் போகவேண்டியதுதான்.

அடுத்தடுத்த அன்னியப் படையெடுப்புகளால் கடந்த இரண்டு, மூன்று நூற்றாண்டுகளாக இருண்டுபோய்க் கிடந்த இந்தியா, இப்போதுதான் யாருடைய தயவும் இன்றி, பொருளாதார வளம் என்ற வெளிச்சத்தைப் பெற்றுவருகிறது. எதிர்கால பொருளாதார, அறிவுசார் வல்லரசு இந்தியாதான் என்பது இந்தியர்களுக்குத் தெரியுமோ இல்லையோ? தற்போது பொருளாதார மந்தநிலையால் தள்ளாடிவரும் மேல்நாட்டு வளர்ந்த நாடுகளுக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் காலை ஊன்றுவதற்கு நமது குரல்வளையிலா இடம் கொடுப்பது?



சுவாமி விவேகானந்தர் வார்த்தையில் சொன்னால், ஆடு என்று நினைத்து கலங்கிக் கொண்டிருக்கும் இந்தியாவே, நீ சிங்கம் என்பதை உணர்ந்து சிலிர்த்து எழு. பொருளாதார வளத்திலும் சரி, சர்வதேச அரசியல் பலத்திலும் சரி, உனது கர்ஜனையை இனி உலகம் கேட்கட்டும்.

-      -   பத்மன்


செவ்வாய், 11 டிசம்பர், 2012

பாரதியைப் பாடுவோம்




(இன்று [11.12.2012] வானவில் பண்பாட்டு மையம் சார்பில் சென்னை திருவல்லிக்கேணி மஹாகவி பாரதியார் இல்லத்தில் பாரதி திருவிழாவில், ஜதி பல்லக்கு உட்பட நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.   வழக்கம்போல் வழக்கறிஞர் திரு. ரவி, திரு. சுப்பு ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். தினமணி ஆசிரியர் திரு. வைத்தியநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். முதுபெரும் கவிஞர் திரு. முருகசரணன், மஹாகவி பாரதிக்குப் போர்த்திய பொன்னாடை மற்றும் பொற்கிழி பெறுகின்ற பாக்கியம் பெற்றார். இந்த அற்புதமான நிகழ்ச்சியில் என் மானசீக குருநாதர் (நேரில் பார்க்கத்தான் வழியில்லையே) மஹாகவி பாரதிக்கு நான் அர்ப்பணித்த பாட்டு அஞ்சலியை இங்கே சமர்ப்பிக்கிறேன். – பத்மன்)


பல்லவி
பாரதியைப் பாடுவோம் பாடிப்பாடி ஆடுவோம்
ஆண்டுதோறும் கூடுவோம் அவன்புகழைப் பாடுவோம்
அனுபல்லவி
பாரதியை – நம்ம பாரதியை – மகாகவி
பாரதியைப் பாடுவோம் பாடிப்பாடி ஆடுவோம்


சரணங்கள்
தாய்மொழிப் பற்றதனை ஊட்டியவன் பாரதி
தாய்நாட்டுப் பெருமையினைத் தீட்டியவன் பாரதி
நாய்போல நமைநினைத்தோர் நடுங்கவைத்தான் பாரதி
நானிலத்தில் ஈடுஇல்லா நற்கவிஞன் பாரதி
                              (பாரதியைப் பாடுவோம்)


சென்றிடுவீர் எட்டுத்திக்கும் என்றுசொன்ன பாரதி
நன்றுமிகு புதுமைகளைப் படைத்தளித்த பாரதி
பாரதமே பாருக்கெல்லாம் திலகமென்ற பாரதி
பாங்குடனே பாரதத்தின் பெருமைசொன்ன பாரதி
                              (பாரதியைப் பாடுவோம்)


வீறுடனே விடுதலைக்குப் பாட்டுரைத்த பாரதி
கூருடனே விடுதலையின் பொருளும்சொன்ன பாரதி
யாருடனும் அன்புகொண்ட அருள்சுரபி பாரதி
தார்வேந்தர் போலநம்மை நிமிரச்செய்த பாரதி
                              (பாரதியைப் பாடுவோம்)


பெண்ணியத்தைப் போற்றினான் பேடிகளை மாற்றினான்
சாதிகளைத் தூற்றினான் சமத்துவத்தைச் சாற்றினான்
தேசீயத்தை நாட்டினான் தெய்வீகத்தைக் காட்டினான்
காவியங்கள் பாடினான் அமரகாவியமாய் ஆகினான்.
                              (பாரதியைப் பாடுவோம்)



ஞாயிறு, 9 டிசம்பர், 2012

“புனித”ப் போர்


‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ என அஹிம்சை வழியில் விடுதலைப் போரில் பாரத மக்கள் இணைந்திடப் பாடினார் நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை. ஆனால் வேறு நோக்கத்திற்காக இப்போது பாரத மக்களுக்கு எதிராக கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று நடத்தப்படுகிறது. இந்தப் போர், கொலை ஆயுதத்தைத் தூக்காமல், தந்திர வலை ஆயுதத்தைத் தூக்கி, மூளைச்சலவை செய்து ஹிந்துக்களை மதமாற்றும் கிறிஸ்தவ திருச்சபைகளின் “புனித”ப் போர்.


மேற்காசியாவில் வாழ்ந்த பாவிகள் மனம்திருந்துவதற்காக சத்தியத்தின் வழியை போதித்து, அதற்குப் பரிசாக சிலுவையில் மரித்த இயேசு பிரான் புனிதர் என்பதிலும் அவர் வணக்கத்துக்குரியவர் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அவர் ஒருவர் மட்டுமே கடவுள் என்றும், கடவுளை அடைவதற்கான வழிகாட்டி என்றும் மற்ற மதத்தின் மகான்கள் மற்றும் வணக்கத்துக்குரியவர்கள்,அவர்களின் வழிபாட்டுக்குரிய தெய்வங்கள் எல்லாம் சைத்தான்கள் என்றும் கூறுவது எந்தவகை ஆன்மிகம்?

ஆண்டாண்டு காலமாய் கபிலர், புத்தர், சங்கரர், ராமானுஜர், மத்வர், ராமகிருஷ்ணர், விவேகானந்தர், ரமணர், அரவிந்தர், வள்ளலார், பாரதியார் என எத்தனையோ மகான்களை அடுத்தடுத்து இந்தப் புவிக்குத் தந்த பாரதத்தில் உள்ள மக்களை, எல்லாவித நல்ல நம்பிக்கைகளும் இறைவனிடம் கொண்டு செல்லும் என்ற பரந்த மனப்பான்மையை இதுபோன்ற மகான்களின் மூலம் பெற்றிருக்கும் மக்களைப் பார்த்து பாவிகள் என்று அழைப்பது என்ன நியாயம்? எந்தவித இறைபக்தி?

மக்களுக்காக ரத்தம் சிந்திய இயேசுவின் பெயரால் மேலைநாடுகளில் ரத்தம்  சிந்தவைக்கப்பட்ட மக்கள் எத்தனைப் பேர்? சிலுவைப்போர் என்ற பெயரில் எத்தனை பேர் கொன்று குவிக்கப்பட்டனர்? அதற்கு முன்பாகவே, ஐரோப்பிய, ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில், paganism என்று பொதுவாக அழைக்கப்படும் நாட்டுப்புற மதங்களைப் பின்பற்றியவர்களை பூண்டோடு அழித்து, அந்த மதங்களின் அடையாளமே இல்லாமல் செய்துவிட்டார்களே? Witch hunt என்ற பெயரில் எத்தனைப் பெண் சாமியார்கள் எரித்தும், சிதைத்தும் கொல்லப்பட்டனர்?


இந்தியாவில்கூட போர்த்துக்கீசிய கிறிஸ்தவ வெறியர்கள் ஏற்படுத்திய ரணங்களை கோவாவில் காணலாம். சென்னையில்கூட, கடற்கரையில் இருந்த  மயிலை கபாலீஸ்வரர் கோவில், இவர்களால் கபளீகரம் செய்யப்பட்டு பின்னர் இடிபாடுகளோடு இடம் மாறியது.

இப்போது ஆயுதங்களை கைவிடுத்து, கத்தியில்லாத யுத்தத்திற்கு தயாராகிவிட்டார்கள். இயேசுவை வணங்குவதால் தாங்கள் சொர்க்கத்துக்குப் போவோம் என்ற நம்பிக்கை மதம் மாற்றும் இறை(ரை) பணியாளர்களிடம் இருக்கிறதோ இல்லையோ, மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் நரகத்துக்குத்தான் போவார்கள் என்ற நம்பிக்கையே இவர்களிடம் விஞ்சி நிற்கிறது.

எல்லோரிடமும் இறைத்தன்மை இருக்கிறது, அதை நோக்கிப் பயணியுங்கள் என்றும் எல்லா வழிகளும் ஒரே இலக்கையே சென்றடையும் என்றும்  சொல்லுகின்ற ஹிந்து மதம் இவர்கள் பார்வையில் காட்டுமிராண்டி மதம். வேற்றுமையில் ஒற்றுமை காண்கின்ற ஹிந்து மதம், சகிப்புத்தன்மை அற்ற மதம். ஆனால், எனது நம்பிக்கைக்கு இவர்களையும் மாற்றிவிட வேண்டும் என்று துடியாய் துடிப்பதுடன், பாவிகள், சைத்தான்கள் என்றும் பிற நம்பிக்கையாளர்களை சாடுகின்ற  இவர்கள்தான் சகிப்புத்தன்மைக்கும், அன்புக்கும் சொந்தக்காரர்கள்.

.
சிலுவையில் மரித்த இயேசுவின் பெயரால் உண்மையையும் சிலுவையில் அறைந்து தங்கள் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்துகிறார்கள். சென்னையில் திரிசூலநாதர் ஆலயத்தின் அருகே உள்ள மலை பிருங்கி ரிஷி தவம் செய்தது என்று கருதப்படுவதால், அது பிருங்கி மலை என்று பெயர்பெற்றது. அது எப்படியோ பரங்கி மலை என்று மருவியது. அதற்கு ஏற்றாற்போல, வரலாற்றுச் சான்றுகளே இல்லாமல் அது தாமஸ் வந்து தங்கிய மலை என்று கதை கட்டி  விட்டார்கள். தற்போது அது செயின்ட் தாமஸ் மவுண்ட் ஆகிவிட்டது.

அதுபோன்ற புதிய சரடு, கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு பகுதியில் தற்போது அரங்கேறியுள்ளது. சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு, தேவசகாயம் பிள்ளை என்று மதம் மாறிய நீலகண்டப் பிள்ளை, மதம் மாறிய காரணத்துக்காகவே திருவாங்கூர் படைக் காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டாராம். அதற்காக அவருக்கு போப் சிபாரிசின் பேரில் அமர்க்களமாய் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.


ஆனால் உண்மை வரலாறு என்ன சொல்கிறது? கொலைத் தண்டனை விதித்த வில்லனாக சித்தரிக்கப்படும் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மர், வரப்புழா சர்ச் கட்ட வரியில்லா நிலம் கொடுத்து உதவியவர்.

மேலும், நீலகண்டப்பிள்ளையை மதம் மாற்றியதாக, கிறிஸ்துவத்தை போதித்தவராக கூறப்படும் டச்சுக்காரரான டிலனாய், புரோட்டஸ்டன்ட் மதப்பிரிவினர். அவர் எப்படி கத்தோலிக்க கிறிஸ்தவப் பிரிவில் சேர நீலகண்டப் பிள்ளையைத் தூண்டியிருப்பார்? அத்துடன் திருவாங்கூர் சமஸ்தானத்தின் படைப்பிரிவுத் தலைவராகப் பொறுப்பு வகித்த டிலனாய்க்காக உதயகிரி கோட்டையில் சர்ச் ஒன்றை கார்த்திகைத் திருநாள் மகாராஜா கட்டிக் கொடுத்துள்ளார்.

இதற்கெல்லாம் மேலாக, நீலகண்டப் பிள்ளை எனப்படும் தேவசகாயம் பிள்ளை என்று ஒருவர் இருந்தாரா? என்பதற்கே வரலாற்றுச் சான்று இல்லை. வெறும் செவி வழிக்கதை மட்டுமே. அதை யார் கிளப்பி விட்டார்களோ? மேலும், திருவாங்கூர் சமஸ்தான வரலாற்று ஆவணங்களின் படி ராஜத்துரோகம், கொலை, களவு போன்ற குற்றங்களைச் செய்தவர்களுக்கு மட்டுமே மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.


வரலாற்றைத் திரித்து யாருக்கோ புனிதர் பட்டம் கொடுக்கட்டும். ஆனால் அதற்காக, பரந்த மனப்பான்மையோடு செயல்படும் ஹிந்துக்கள், அவ்விதமே நடந்து கொண்ட மார்த்தாண்ட வர்மா உள்ளிட்ட நமது முன்னோர்கள் எதற்கு படுகொலை செய்த பாவிகள் என்ற பட்டத்தை சுமக்க வேண்டும்?

இந்தியாவை மதமாற்றக் களமாகக் கருதும் திருச்சபையினர் ஏற்கெனவே புனிதர் பட்டம் கொடுத்த ஒருவரின் வரலாற்றைப் பார்ப்போம்.  அவர்தான் செயின்ட் ஃபிரான்சிஸ் சேவியர். ஸ்பெயினில் பிறந்து போர்த்துகீசியர்களின் பேராதரவுடன் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் தீவிர கிறிஸ்தவ மதப் பிரச்சாரம் செய்தவர் சேவியர். கோவாவில் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய பிறகும் ரகசியமாக சொந்த மத வழிபாடுகளில் ஈடுபட்டவர்களுக்கும், மதம் மாற மறுக்கும் அப்பாவிகளுக்கும் inquisition எனப்படும் சித்திரவதை செய்து கொல்லும் தண்டனையைத் தர வேண்டும் என பாடுபட்டவர் இந்த சேவியர். அவர் இறந்த பிறகு, அவரது இந்த முயற்சி உயிர்பெற்றது. கோவாவில் 1560-ல் கொண்டுவரப்பட்டு இருநூறு ஆண்டுகளுக்கு மேல் நீடித்த inquisition என்ற அந்த வதை படலத்தால் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர்.


முக்கியமாக ஒரு விஷயம். தற்போது புனிதர் என்று அறிவிக்கப்பட்டுள்ள தேவசகாயம் பிள்ளை ஜனவரி 14-ம் தேதிதான் கொல்லப்பட்டார் என்று ஆன்மீக நாட்டத்தைவிட மதமாற்றம் செய்யும் பணியே முக்கியம் என்று கருதும் திருச்சபையினர் கூறுகின்றனர். அந்த ஜனவரி 14-ம் தேதிதான் தமிழர்கள் பொங்கல் கொண்டாடுகிறோம். முன்பு கிரீசிலும், ரோமிலும் நடந்ததை நினைத்தால், நமது பொங்கல் பண்டிகையும் விரைவில், ஞானஸ்நானம் பெற்று ‘பொங்கல்’ ஆகலாம். எச்சரிக்கை!
-    
  - பத்மன் 

வெள்ளி, 30 நவம்பர், 2012

புத்திசாலி சிறுமி



முன்னொரு காலத்துல அண்ணன்-தம்பி ரெண்டு பேரு இருந்தாங்க. மூத்தவன் பேரு மூர்த்தி, பணக்காரன். இளையவன் பேரு இன்னாசி, ஏழை. ரெண்டு பேரும் ஒரு நாள் பக்கத்து ஊர்ல வருஷாவருஷம் நடக்கற குதிரைச் சந்தைக்குப் போனாங்க. மூத்தவன் ஆண் குதிரை ஒண்ணையும், இளையவன் பெண் குதிரை ஒண்ணையும் விக்கறதுக்குக் கொண்டு போனாங்க.


      வழியில இருட்டிப்போனதால சத்திரத்துல தங்கினாங்க. குதிரை ரெண்டையும் வாசல்ல தனித்தனித் தூணுல கட்டியிருந்தாங்க. விடிஞ்சபின்ன ரெண்டுபேரும் வெளில வந்து பார்த்தா ஆச்சர்யம்! மூணு குதிரை இருந்தது. அந்த மூணாவது குதிரை பெருசா இல்ல, சின்னூண்டு குட்டி. ராத்திரிலே பெண் குதிரை பிரசவிச்சது. அம்மா மடில பால் குடிச்சிட்டு முன்னங்கால தூக்கி கஷ்டப்பட்டு நடக்க முயற்சி பண்ணின அந்தக் குட்டி, ஆண் குதிரை பக்கமா தவழ்ந்து வந்தது. அதைப் பார்த்த ஆண் குதிரை அன்பா கனைச்சது. அந்த நேரம்தான் அண்ணன்-தம்பி ரெண்டு பேரும் வெளில வந்து மூணு குதிரையைப் பார்த்தாங்க.


      மூர்த்தி சொன்னான் “இந்தக் குட்டி என்னோடது. என் குதிரை பெத்தது.” இதைக் கேட்ட ஏழைத் தம்பி இன்னாசி சிரிச்சான். “ஆண் குதிரை எங்கனாச்சும் குட்டி போடுமா? இது என் பெண் குதிரையோடது” அப்படின்னான். ரெண்டு பேருக்கும் சண்டை முட்டிக்கிச்சு. வழக்கு பஞ்சாயத்துக்குப் போனது. ஒவ்வொரு வருஷமும் குதிரைச் சந்தை  தொடங்குற போதும், பஞ்சாயத்துல நீதிபதியா அந்நாட்டு ராசாவே இருக்கிறது வழக்கம். அதுனால இந்த வழக்கை ராசாவே விசாரிச்சாரு.


      அண்ணன்-தம்பி சச்சரவைக் கேட்டதுமே அவருக்கு விஷயம் விளங்கிப் போச்சு. தம்பியோடதுதான் அந்தக் குதிரைக் குட்டின்னு நியாயமா தீர்ப்பு சொல்ல நெனச்சாரு. அப்போப் பார்த்து கெட்ட நேரமோ என்னவோ, தம்பிக்காரனுக்கு திடீர்னு ஒரு கண்ணு துடிச்சது. அதப் பார்த்த ராசா, ஆகா! இந்த ஏழை, தனக்கு சாதகமா தீர்ப்பு சொல்லுன்னு கண்ண சிமிட்டறானேன்னு நெனச்சாரு.

      மரியாதை தெரியாத இந்தப் பயல தண்டிக்கனும்னு தீர்மானிச்சாரு. அதனால “இந்த வழக்கு ரொம்ப சிக்கலா இருக்கு. இதுக்குத் தீர்ப்பு சொல்றது முடியாத காரியம்னு நெனக்கிறேன். அதுனால நான் நாலு புதிர் போடறேன். அதுக்கு யாரு பதில் கண்டுபிடிச்சிட்டு வர்றாங்களோ அவங்களுக்குத்தான் குதிரைக் குட்டி சொந்தம்” அப்படின்னு சொன்னாரு. “உலகத்திலேயே மிக வேகமானது எது? கொழுப்பு நெறைஞ்சது எது? மிருதுவானது எது? மேலும் விலை மதிக்க முடியாத உசத்தியானது எது?” அப்படிங்கற நாலு புதிரையும் சொன்னாரு.



      வர வழியில மூர்த்தி யோசிச்சான். அடடா, இந்தப் புதிருங்களுக்கு நம்மால பதில் சொல்ல முடியாதே? பதில் சொன்னாத்தானே குதிரைக் குட்டிய வாங்க முடியும்? அப்ப திடீர்னு அவனுக்கு ஒரு நெனப்பு தட்டிச்சு. அவன்கிட்ட கடன் வாங்கியிருந்த காய்கறிக்காரி சிரிக்கச் சிரிக்கப் பேசுவா, சாமர்த்தியக்காரின்னு கூட சில பேரு சொல்லுவாங்க. அவகிட்டப் போனான் மூர்த்தி. நாலு புதிருக்கு விடை சொன்ன கடன்ல ஒரு பகுதியை கழிச்சிக்கறேன்னு சொன்னான். அவ, தான் எவ்வளவு சாமர்த்தியக்காரின்னு அப்போ நிரூபிச்சா. கடன் முழுசையும் தள்ளுபடி செஞ்சா விடை சொல்றேன்னா.

      மூர்த்தி சரின்னதும், குசும்பு பிடிச்ச அந்தக் காய்கறிக்காரி, உலகத்துலேயே ரொம்ப வேகமானது என் புருஷனோட கோவேறுக்கழுதை, போன வருஷம் ஓடிப்போனது இன்னும் அது அகப்படலே. ரொம்பக் கொழுப்பு நெறஞ்சது எங்க வீட்டு எருமை மாடுதான். அதோட பாலுல எவ்வளவு தண்ணி கலந்தாலும் கெட்டியா இருக்கும். ரொம்ப மிருதுவானது என் மெத்தைல இருக்கிற குயில் இறகு. ரொம்ப உசத்தியானது என் தம்பியோட ஒரு வயசுக் கொழந்தை. உலகத்துல உள்ள தங்கத்தைக் கொட்டிக் கொடுத்தாலும் என் மருமகனை விட்டுத்தர மாட்டேன் அப்படின்னு அவ சொன்னா.

      இதே போல வீட்டுக்கு சோகமா திரும்பின இன்னாசியைப் பார்த்து அவனோட அஞ்சு வயசு மக, “என்னப்பா விஷயம்”னு கேட்டா. மகளைவிட்டா வேற ஆதரவு இல்லாத அவன் நடந்ததைச் சொல்லி ராசாவோட நாலு புதிரையும் சொன்னான். ஏழையோட மக, அவளோட  வயசையும் மிஞ்சின புத்திசாலி.


      “அப்பா, கவலைப்படாத. நான் பதில் சொல்லறேன். அதைப்போய் ராசாட்ட சொல்லு. உலகத்துலேயே ரொம்ப வேகமானது வடக்குப் பக்கத்துலேர்ந்து வீசற வாடைக்காத்து. ரொம்ப கொழுப்பு உள்ளது, பயிர் விளையிற நிலம். ஏன்னா அதுல விளையற பயிர்களை தின்னுட்டுதான் மிருகங்களும், மனிஷங்களும் பலம் ஆகிறோம். உயிர் வாழறோம். உலகத்துலேயே மிருதுவானது குழந்தையோட ஸ்பரிசம். மிக உசத்தியானது நேர்மை” அப்படின்னு பதில் சொன்னா.

                புதிருக்கு விடை சொல்ல சகோதரர்கள் ரெண்டு பேரும், ராசாவோட அரண்மனைக்குப் போனாங்க. மூத்தவன் பதில்களைக் கேட்டதும் ராசாவும், பிரதானிகளும் விழுந்து விழுந்து சிரிச்சாங்க. இளையவன் பதில் சொன்னதும் ராசாவோட முகத்துல ஈயாடலே. இவ்வளவு புத்திசாலித்தனமா சொல்லிட்டானேன்னு அவரு முகத்துல எள்ளும் கொள்ளும் வெடிச்சது. அதுவும் உலகத்துலேயே உசத்தியானது நேர்மைன்னு நாலாவது புதிருக்கு பதில் சொன்னபோது ராசா முகம் கறுத்துப்போச்சு. ஏழைக்கு அதுவரை நியாயம் கிடைக்காம நாமதான் ஏமாத்திட்டு இருக்கோம்னு அவரோட மனசாட்சி உறுத்தினாலும், அவைக்கு முன்னால தன் தப்ப ஏத்துக்க அவரால முடியலே.


      ”யார் உனக்கு இந்த பதில்களைச் சொன்னது?” உறுமினாரு ராசா. தன்னோட அஞ்சு வயசு மகள்தான்னு இன்னாசி உண்மயைச் சொன்னதும், “இந்த சின்ன வயசுலே இவ்வளவு பெரிய புத்திசாலியா உன் மக இருக்கறதுக்கு கண்டிப்பா பரிசு தரணும். உன்னோட அண்ணன் உரிமை கொண்டாடற குதிரைக் குட்டியையும், அதோடு சேர்த்து ஆயிரம் வராகனும் உனக்குத் தரலாம். ஆனா.....” என்று சொன்ன ராசா சபையோரைப் பார்த்து கண்ணைச் சிமிட்டினார்.

      இன்னாசியைப் பார்த்து, “உனக்கு ஒரு வாரம் அவகாசம் தரேன். நீ உன் மகளோட இங்கு வரணும். உன் மக பெரிய புத்திசாலி இல்லையா? அதனால ஒரு சோதனை வைக்கறேன். உன் மக இங்க வரும்போது அம்மணமாகவும் வரக்கூடாது, ஆடை அணிஞ்சும் வரக்கூடாது; மிருகங்கள் மேல ஏறியும் வரக்கூடாது, நடந்தும் வரக்கூடாது; அவ எனக்குப் பரிசும் கொண்டு வரக்கூடாது, வெறும் கையோடவும் வரக்கூடாது. நான் சொன்னபடி உன் மக வந்த, உனக்கு குதிரைக் குட்டியும் பரிசும் உண்டு. இல்லேன்னா திமிரு பிடிச்ச உன்னோட தலைய சீவிடுவேன்” அப்படின்னு ராசா சொன்னாரு.


      சபையிலே இருந்தவங்களுக்கெல்லாம் ஒரே சிரிப்பு. ராசாவோட நிபந்தனையை இந்த ஏழை நெறைவேத்த முடியாதுன்னு நெனைச்சாங்க. கண்ணீரோட வீட்டுக்குத் திரும்பினான் இன்னாசி. அழுதுகிட்டே அவன் சொன்னத அமைதியா மக கேட்டா. “நாளைக்கே நாம அரண்மனைக்குப் போகலாம். ஒரு புறாவைப் பிடிச்சிட்டு வாங்க. அப்புறம் நான் சொல்லறபடி நீங்க செய்யுங்க. உங்களுக்குப் பரிசு நிச்சயம்” அப்படின்னு சொன்னா. மக சொன்னபடி அவமேல மீன் வலையால போர்த்தி, கூடைல வெச்சு அரண்மனைக்குத் தூக்கிட்டுப் போனான் இன்னாசி.

      ராசா சொன்னபடி இன்னாசியோட மக, அம்மணமாகவும் வரல, ஆடையும் உடுத்தல; மிருகங்கள் மேலயும் வரல, நடந்தும் வரல; அப்போ ராசா கேட்டாரு: “நான் சொன்ன மூணாவது நிபந்தனை என்னாச்சு? பரிசும் கொண்டு வரக்கூடாது, வெறும் கையோடவும் வரக்கூடாதே?’’. உடனே தன் கையில வெச்சிருந்த புறாவை ராசாவை நோக்கிப் பறக்க விட்டா அந்தப் பொண்ணு. அது அவர் கைல சிக்காம பறந்து போச்சு. இப்போ மூணுலயும் ஏழையோட மக ஜெயிச்சிட்டா.

      அப்பாவும் ராசாவுக்கு திருப்தி வரல. “உன் அப்பா உண்மையிலேயே ஏழையா? அவருக்கு இந்தக் குதிரைக் குட்டி வேணுமா”ன்னு கேட்டாரு. “ஆமாம். நாங்க ரொம்ப ஏழை. எங்க அப்பா, நதியில பிடிச்சிட்டு வர்ற முயலையும், மரத்துலேர்ந்து பறிச்சிட்டு வர்ற மீன்களையும் வெச்சுதான் நாங்க வாழறோம்” அப்படின்னா.


      ஹோஹோன்னு சிரிச்சாரு ராசா. “இவ்வளவுதானா உன் புத்திசாலித்தனம்? எங்கேயாவது ஆத்துல முயலும், மரத்துல மீனும் கிடைக்குமா?” அப்படின்னு கேட்டாரு. “உங்க ஆட்சில ஆண் குதிரை மட்டும் குட்டி போடும்போது, இது நடக்கக் கூடாதா?” அப்படின்னு பதிலுக்குக் கேட்டா சின்னப் பொண்ணு. இதைக் கேட்டதும் ராசாவும், மத்த எல்லாருமே சிரிச்சுட்டாங்க.

      இனியும் நாம வீராப்பு காட்டக் கூடாதுன்னு நெனைச்ச ராசா, சொன்னபடியே குதிரைக் குட்டியோட, ஆயிரம் வராகனும் கொடுத்து இன்னாசியையும் அவனோட மகளையும் வாழ்த்தி அனுப்பி வெச்சாரு. “என்ன இருந்தாலும் என் ராஜ்ஜியத்துலதான் இந்த மாதிரி புத்திசாலிக் குழந்தைகள் பிறக்க முடியும்”ன்னு மீசையை முறுக்கிக்கிட்டாரு ராசா.

-    பத்மன் 

செவ்வாய், 27 நவம்பர், 2012

ஹரஹர சிவசிவ



(இன்று (27.11.12) திருக்கார்த்திகை தினம் அண்ணாமலை தீபத்தையொட்டி எனது இந்தப் பாடலை பக்தர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்.)

ஹரஹரஹர சிவசிவசிவ அரஹரோஹரா
ஹரஹரஹர சிவசிவசிவ அரஹரோஹரா


கைலாசவாசா பக்தநிவாஸா
கௌரீப்ரபு கங்காதரா சந்த்ரசேகரா  (ஹரஹரஹர)

தீனதயாளா விஸ்வநாதா
அர்த்தநாரி கருணாகரா அம்ருதசாகரா (ஹரஹரஹர)



காமமாரகா காலமாரகா
சித்திதாதா முக்திதாதா சரணம்விதாதா (ஹரஹரஹர)

த்ரிஜோதிநேத்ரா த்ரிசூலதாரணா
த்ரிலோகநாதா ஞானகுரு த்ரிபுரதஹனா (ஹரஹரஹர)


நீலகண்டா நிர்மலரூபா
சரணமஹம் சரணமஹம் பரமேச்வரா (ஹரஹரஹர)

-    பத்மன்

சனி, 24 நவம்பர், 2012

Kasab, an another name of Kindness



(Don’t get anger on me. This is my ethical anger, outburst into satire, towards people who criticized execution of death penalty on Terrorist Ajmal Kasab.)

How many people born in the world fulfill their duties according to what their names stand for? Only few exceptions are there. Ajmal Kasab should be one of that Great Souls list. In Arab, Kasab means butcher and Ajmal means handsome. To give meaning to his own name, how Kasab executed slaughtering in a beautiful way!



As he thought butchering four legged creatures is not good for him, he massacred two legged species. Moreover, he thought butchering by sword is an obsolete method, hence he slaughtered by Machine Gun, a most modern weapon.

Ajmal Kasab was a greatest instrument delivered by Almighty, to cut down the huge Indian population. Alas! Because of our (Indian) security personnel’s foolishness, other Ahimsa Lords sent by God along with Kasab were eradicated. Ajmal Kasab alone saved.



Is this not our duty, an incomparable soul like Kasab should be kept in a sophisticated prison cell with providing him Chicken, Mutton Briyani etc. for lifelong period?  Are we not giving hospitalities like these, to Afsal Guru, our Indian Terrorist? Was a separate treatment for abroad terrorist a just?

Was this not our duty to adopt Kasab, a generous man abandoned by his own country, Pakistan?  Instead, we produced him before Justice, and gave all legal assistances led him only to hang?

Okay. Shouldn’t we satisfy with the proclamation of Death Penalty? Why that execution? Didn’t we adopt a stand with generosity, only to proclaim death penalty and let the convicted to die in a natural way, in lot of cases? Why this barbaric attitude only towards Kasab? Was a compassionate man like Kasab fit to get Death Penalty, for took a brutal weapon and massacred more than hundred persons?




Kasab submitted mercy petition to President, only to get a thing (mercy) which he doesn’t has. Was his mercy petition a thorn shrub? Why the President rejected it? Doesn’t he know the art of indecisiveness?

Are they not hearing the roar of intellectuals that death penalty is not fit for refined society? Yes. Men like Terrorists and Cruel Killers having the birth right to massacre fellow humans and this is their bounding duty also. Is this a punishable crime with death penalty, to fulfill this right and duty?




Not a death penalty, even a life penalty should not be given to Kasab. As victims, is this not our duty to honor Kasab, A man with Supreme Motto of Massacre? Today onwards, we should avoid giving death or life penalty to great men like these, to memorize the bountiful act of Kasab. It may be good to announce a Great Terrorist Award in the name of Ajmal Kasab.

-          PADMAN