வியாழன், 16 ஏப்ரல், 2015

தாலி அகற்றல் புரட்சி அல்ல, சிந்தனை வறட்சி!


தமிழர்களின் மரபுச் சின்னமான தாலியை, பெண்களின் அடிமைச் சின்னம் என்று கூறி, அதனை அகற்றும் நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகம் அறைகூவல் விடுத்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் திடீர் ஞானோதயத்தால் மறுதலிக்கப்பட்ட, ஆனால் பெருவாரியான தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்பற்றப்படுகின்ற தமிழ்ப் புத்தாண்டு தினத்தை (ஏப்ரல் 14), அந்த நிகழ்வுக்கான தினமாகவும் அறிவித்தது.
இந்தக் கேலிக்கூத்துக்கு காவல்துறை தடை விதித்தபோதிலும், உயர் நீதிமன்றத்தின் தடை நீக்கம், மீண்டும் தடை என்ற குழப்படிக்கு மத்தியில், அவசர அவசரமாக இந்த தாலி அகற்றும் அலங்கோலம் அரங்கேறியது.  தமிழர்களின் திருமண வாழ்வில் தாலி இடைக்காலத்தில் வந்ததுதான், அதனை அகற்றி எறிவதில் என்ன தவறு?” என்பது இவர்களது வாதம்.
திருமணம், குடும்ப வாழ்க்கை என்பதே இடைக்காலத்தில் வந்ததுதான். ஆதிகாலத்தில் எதுவும் இல்லை. அந்தக் கற்காலத்துக்கு நாம் திரும்பிச் செல்ல வேண்டுமா? காடுகளில், மலைகளில் கூட்டமாக வாழ்ந்த மனிதன், குடும்பமாக வாழத் தலைப்பட்டதால்தான் சமூகம் உருவானது, நாகரிகமும், பண்பாடுகளும் மலர்ந்தன. அந்த நாகரிகத்தையும், பண்பாட்டையும்தான் தமிழர்களின் கலாசார அடையாளங்களாக நாம் போற்றுகிறோம், வழிவழியாய் பின்பற்றுகிறோம். அதன் உட்பொருளை உணர்ந்துகொள்ளாமல், கட்டுடைக்கிறோம் என்று கட்டாந்தரையில் முட்டி மோதுவதா பகுத்தறிவு?
தாலி கட்டுவது என்பது ஆரியர், அதாவது வடநாட்டார் அதாவது பிராமணர் வழக்கம் என்றும் அதனை தமிழர்கள் மீது புகுத்திவிட்டனர் என்றும் சில அமைப்பினர் கூறுவதில் உண்மை இல்லை.
நாங்களும் இருக்கிறோம் என்று காட்டுவதற்காக எதையாவது பிரச்னையாக்கித் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் முயற்சியாகத்தான் இது தெரிகிறது.
தாலி கட்டும் பழக்கத்துக்கு அந்தணர் ஓதுகின்ற வேதத்தில் இருந்து ஆதாரம் காட்ட முடியுமா? முடியாது. வேதத்தில் அது இல்லை. வைதீகம் என்று கூறி நடத்தப்படுகின்ற சடங்குகளிலே தாலி இருக்கிறது. ஆனால் வேத இலக்கியங்களில் இல்லை.
வைதீகச் சடங்குகளும் அவற்றுக்கான சம்ஸ்கிருத மந்திரங்களும் காலப்போக்கில், அந்தந்த வட்டாரங்களுக்கு, அந்தந்த கலாசாரங்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டவை. உதாரணத்துக்கு, திராவிட இயக்கத்தாரின் திராவிட நாட்டு வரையறைக்குள் இடம்பெறும் ஆந்திரத்தில் நடைபெறும் வைதீகத் திருமணச் சடங்குகள் தமிழர்தம் வைதீகச் சடங்குகளில் இருந்து வேறானவை. இதேபோல்தான் கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களின் வைதீகச் சடங்குகளும் மாறுபாடுடையவை. ஆக வைதீகச் சடங்குகளில் இடம்பெற்றாலும் தாலிக்கு வேத நிரூபணம் இல்லை.


அதேசமயம், தமிழர்தம் சங்க இலக்கியத்திலே திருமணச் சடங்குகளும் இருக்கின்றன, தாலியும் இருக்கிறது. ஊர் கூடித் திருமணம் நடத்தும் முறை ஏன் வந்தது என்பதற்கு பொய்யும் வழுவும் தோன்றிய பி்ன்னர் ஐயர் யாத்தனர் கரணம்  என்ப (கற்பியல்   - 143) என்ற தொல்காப்பியச் செய்யுள் விடை தருகிறது.
விருப்பப்பட்ட ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் வாழ்க்கை முறையிலே தங்களுக்குள் எந்த பந்தமும் இல்லை என்று பொய் கூறி ஏமாற்றுவதும், தவறுகளும் மலிந்துவிட்ட காரணத்தால்தான், கரணம் எனப்படும் திருமண முறையை, சமூகத் தலைவர்கள் கொண்டுவந்தனர் என்பது இதன் பொருள்.
இந்தத் திருமணம் எப்படி நடைபெற வேண்டும் என்பதற்கும் தொல்காப்பியம் விளக்கம் தருகிறது. (கற்பியல் - 140)
கொளற்கு உரி மரபின் கிழவன் கிழத்தியை
கொடைக்கு உரி மரபினர் கொடுப்ப, கொள்வதுவே.
மணப்பெண்ணை ஏற்பதற்கு உரிய குடியைச் சேர்ந்த மணமகன், அப் பெண்ணைத் தனக்கு இல்லாளாகத் தருவதற்கு உரிய குடியைச் சேர்ந்தோர் கொடுக்க, ஏற்றுக்கொள்வதே திருமணம் என்கிறது தொல்காப்பியம்.
இவ்வாறாக தகுதியுடைய மணமகனுக்கு, தகுதி உடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டுப் பெண்ணை மணமுடித்துத் தருகின்றனர். அந்தத் தகுதியை எவ்வாறு தேர்ந்தெடுத்தனர்?  வீரமுடைய ஆண்மகனுக்கே முதலிடம். ஆகையால் புலியோடு போராடி அதனுடைய பல்லைப் பிடுங்கிக்கொண்டு வந்து, தன் வீரப் பரிசாக பெண்ணுக்குத் தாலியை அணிவித்தான் அக்காலத் தமிழன். பின்னர் உண்மையான புலிப் பல்லைக் கொண்டு வருவது அருகி, பொன்னால் ஆன புலிப்பல், தாலியில் இடம்பெற்றது. ஆகையால்தான், இக்காலத்திலும் தமிழர்களின் தாலியின்  கீழே இருபுறமும் புலிப் பல் போன்ற தோற்றத்துடன் அமையப் பெற்றுள்ளது.
சங்க காலத்திலே சிறுவர்கள்தான் ஐம்படைத் தாலி அணிந்தார்கள், பெண்கள் தாலி அணிந்ததில்லை என்று கூறுவது திரிபுவாதம். தாலி என்றால் அணியப்படும் கயிறு என்று பொருள். அவ்வகைத் தாலி ஒன்றை அதாவது கயிற்றை, சிறுவர்கள் அணிந்தார்கள் என்பது உண்மையே. அதேபோன்று பெண்களும் மங்கல நாணாகிய கயிற்றை அணிந்திருக்கிறார்கள்.

தமிழ்ப் பெண்கள் தாலி அணிந்ததற்கு ஏது சங்க இலக்கிய ஆதாரம் என்பதற்கு கீழ்வரும் பாடல்கள் விடைதரும்.
அகநானூற்றில் கயமனார் இயற்றிய ஏழாம் பாடலின் வரி  பொன்னொடு புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி”  என்று அமைந்துள்ளது.  பாலைத் திணையில் அமைந்த இந்தப் பாடல், தலைவியைப் பார்த்து செவிலித் தாய் பாடியது. பருவப் பெண்ணின் உடல் மாற்றத்தைக் கூறும் அந்தப் பாடலில், தங்கத்தோடு புலிப்பல் கோத்த ஒளிவீசிய தாலியை தன் மகள் அணிந்திருப்பதாக செவிலித் தாய் பாடுகிறாள்.
அந்தத் தாலி, திருமணமான பெண்கள்  கழுத்தில் அணியும் தாலிதானா  என்பதற்கு புறநானூற்றின் 127-ஆவது பாடல் சான்று தருகிறது. அப்பாடல், ஆய் என்னும் குறுநில மன்னனை வாழ்த்தி, புலவர் உறையூர் ஏணிச்சேரி முட மோசியார் பாடியது.
ஆய் எனும் மன்னனின் கோயில் அதாவது அரண்மனையானது, யாழிசைத்த பாணர்களுக்கு அம்மன்னன் யானைகளைப் பரிசாகத் தந்து விட்டதால், வெறிச்சோடிக் கிடக்கும் யானை கட்டும் தறிகளில் காட்டு மயில்கள் அச்சமின்றி அமர்ந்திருக்கும் வகையிலும், ஆய் குலத்துப் பெண்கள் ஈகையாக கொடுக்க இயலாத மங்கலநாணாகிய தாலி அன்றி வேறு எந்த அணிகலனும் அணியாத நிலையிலும் பொலிவிழந்து காணப்பட்டாலும், மற்ற மன்னர்களின் அரண்மனையைவிட அதுவே உயர்ந்தது என்கிறார் புலவர். ஏனெனில் ஆயின் கொடைத்தன்மை அத்தகையது. அப்படிப்பட ஆய் மன்னனின் வீட்டுப் பெண்களிடம், மற்ற நகைகள் தங்காமல்போயினும், தங்கத்தாலான தாலி மட்டுமே மிஞ்சியிருக்கிறது.  ஏனெனில், கொடை வள்ளல் ஆய் மன்னனாலேயே கொடையாக அளிக்கப்பட முடியாத புனிதம் வாய்ந்தது அந்தத் தாலி என்பதுதானே இதன் பொருள்.
இதோ அந்தப் பாடல் வரிகள்:
                “களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப்
     பாடின் பனுவற் பாண ருய்த்தெனக்
     களிறில வாகிய புல்லரை நெடுவெளிற்
     கான மஞ்ஞை கணனொடு சேப்ப
     ஈகை யரிய விழையணி மகளிரொடு
     சாயின் றென்ப வாஅய் கோயில்
ஈகை அரிய இழையணி மகளிர் என்ற வரிகளை நோக்க வேண்டும். ஈகை அரிய இழை என்பது மங்கல நாணாகிய தாலியைத் தவிர வேறு என்ன?
அது இருக்கட்டும், முதலில் தாலி என்ன அடிமைச் சின்னமா? இல்லையில்லை. தமிழர்களின் வீரம் சார்ந்த கலாசாரத்தின் அடையாளம். வீரத்தைக் காட்ட முதலில் உண்மையான புலிப்பல்லைக் கோத்த தாலி அணிவித்த தமிழன், பிறகு புலிநகம் வைக்கும் இடத்திலே பொன்னை வைத்து, தனக்குப் பெண்ணை வைத்துக் காப்பாற்றும் பொருள் பலம் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டினான்.


தாலி, ஆணுக்குப் பெண்ணை அடிமையாக்கும் சின்னம் அல்ல, பெண்ணுக்கு ஆண் தரும் காணிக்கை. அதைக் கழுத்தில் அணிவிப்பது, ஆணுக்குப் பெண் அடிமை என்பதைக் காட்டுவதற்கு அல்லவா என்று கேட்டால், விருதுகளையும், விளையாட்டுப் பதக்கங்களையும் தாலிபோல் மாலையாகக் கழுத்தில்தானே இப்போதும் அணிவிக்கிறார்கள்? அது என்ன அவமானமா அல்லது கௌரவமா? பதக்கம் அணியப் பெறுபவர்கள் தலைவணங்கி ஏற்றுக்கொள்வது மரபு, இயல்பான செயலும்கூட. இதில் எங்கே வந்தது அடிமைத்தனமும் அவமானமும்?
அதுபோல, தனது இல்லக் கிழத்தியை கௌரவிக்கும் வகையிலேயே அவளுக்குத் தாலியைக் கழுத்தில் அணிவித்தனர் நமது தமிழ் முன்னோர்கள். இது அவமானம் அல்ல, அடையாளம்.

மகாகவி பாரதி, கற்பு நிலையென்று சொல்ல வந்தால் இரு கட்சிக்கும் அஃதை பொதுவில் வைப்போம் என்று கூறியதற்கிணங்க, திருமணம் ஆன ஆண்களும் இனிமேல் தாலி அணிய வேண்டும் என்று வேண்டுமானால் போராடலாம். அதை விட்டுவிட்டுத் தாலியை அவிழ்ப்போம், அறுப்போம் என்று கிளம்புவது புரட்சியல்ல, சிந்தனை வறட்சி!

- பத்மன்