(கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஐயா அப்துல் கலாம் அவர்களை, பிரைம் பாயிண்ட் திரு. சீனிவாசன் உதவியால், தமிழக ஆளுநர் மாளிகைக் கட்டடத்தில் நேரில் சந்தித்து உரையாடும் பாக்கியம் பெற்றேன். அப்போது கலாமைப் புகழ்ந்து நான் எழுதிய வெண்பாக்களை அவரிடம் படித்துக் காண்பித்து சமர்ப்பித்தேன். அருமை என்று வாழ்த்தினார். ஆனால் கொடுமை - அதன் பிரதியைத் தொலைத்துவிட்டேன். யோசித்துப் பார்த்தும் புலப்படவில்லை தாள் பிரதியும், மூளைப் பிரதியும். ஆகையால், கலாம் அவர்களின் நல்லடக்க தினமான இன்று (30.07.15) அவர் குறித்து உடனடியாக எழுதிய இந்தக் கவிதையை அந்த அமர நாயகன் அப்துல் கலாமுக்கு காணிக்கை ஆக்குகிறேன்.)
சாதிவெறி கடந்து சமத்துவம்
பேணினால் சாதிக்கலாம்
நீதிநெறி நடந்து நேர்மை பேணினால்
நிலைக்கலாம்
கருணை மொழிபேசி கடுமை போக்கினால்
ஆக்கலாம்
கடமை வழிசென்று கயமை நீக்கினால்
காக்கலாம்
மடமைத் தனம்நீங்கி மாற்றங்கள்
செய்திட அழிக்கலாம்
வறுமைத் தளைநீக்கி வளர்ச்சிக்கு
உழைத்திட செழிக்கலாம்
விஞ்ஞானம் தனைக்கொண்டு விவரங்கள்
அறிந்திட சோதிக்கலாம்
மெய்ஞானம் தனைக்கண்டு மேன்மை
அடைந்திட வாதிக்கலாம்
தேகம் மறந்து தேசம் நினைத்திட
தலைவனாகலாம்
நேசம் மிகுந்து தொண்டு புரிந்திட
தெய்வமாகலாம்
அத்தனையும் செய்தவர்தாம் எங்கள்
அய்யா அப்துல்கலாம்
அவர்வழி சென்றால் கட்டாயம் ஆகலாம்
நாமும்கலாம்
- - பத்மன்
கொசுறாக ஒரு புதுக்கவிதை
ஏவுகணை நாயகர்
இறுதியில் தன்னையே ஏவியதன்மூலம்
கடவுள் தனது மானுட வேஷம் கலைத்து
மறுபடியும் விண் புகுந்தார்.