ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

உயர்வைத் தரும் உய்யக்கொண்டான் திருமலை


விடாமுயற்சியும் தன்னம்பிக்கையுமே நம்மை உயர்த்துகின்றன. சோம்பலும், அவநம்பிக்கையும் நம்மைத் தாழ்த்துகின்றன. கஷ்டங்களில் இருந்து விடுபட ஒரே வழி, அவற்றைப் போராடி வெல்வதுதான். இதற்குத் தேவையான மனத் தெம்பை இறை நம்பிக்கையே நமக்கு அளிக்கிறது.

இதை உணர்த்தத்தான் இறைவன், நாம் விடா முயற்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் சில கஷ்டங்களைத் தாங்கிக்கொண்டு, அவரை வழிபடும் வகையில், சில ஸ்தலங்களில்  உயரே மலை மேலே கோவில் கொண்டிருக்கிறார். அந்தவகையில் இன்று நாம் அறிந்துகொள்ளவிருக்கும் மலைக்கோவில், திருச்சி அருகே உள்ள உய்யக்கொண்டான் திருமலை.


திருச்சி என்றதுமே நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள மலைக்கோட்டையும் உச்சிப் பிள்ளையார் கோவிலும் பலரது நினைவில் நிழலாடும். திருச்சியில் அங்கு மட்டுமல்ல, வேறொரு இடத்திலும் மலைக்கோட்டையும், உச்சிக்கோவிலும் சிறப்புற அமைந்துள்ளன. அந்த இடம்தான், திருச்சிக்கு மேற்கே சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள உய்யக்கொண்டான் திருமலை எனப்படும் திருக்கற்குடி. இது அற்புதமான சிவஸ்தலம்.

திருமலை என்றால் போற்றுதலுக்குரிய, வணக்கத்துக்குரிய மலை என்று பொருள். வடக்கே, வேங்கடம் எனப்படும் திருப்பதியில் வெங்கடேசப் பெருமாளுக்கு ஒரு திருமலை என்றால், தெற்கே சிவபெருமானுக்கு திருச்சியில் இந்தத் திருமலை.

மலைதோறும் ஆடுகின்ற முருகப் பெருமான், திருச்சி மாவட்டத்தில் வயல் நடுவே வயலூரில் வீற்றிருக்க, அவரது அண்ணன் விநாயகர் திருச்சி மலைக்கோட்டையிலும், அப்பன் சிவபெருமான் உய்யக்கொண்டான் திருமலையிலும் உறைவது வித்தியாசமான தெய்வ சங்கல்பம்தான்.


உய்யக்கொண்டான் திருமலை என்று பெயரைக் கேட்டதும் மிகப் பெரிய மலையாக இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ள வேண்டாம். சுமார் ஐம்பது அடி உயரமுள்ள சிறிய குன்றுதான். உய்யக்கொண்டான் கால்வாய் கரையினிலே இந்தக் குன்று அமைந்துள்ளது. குன்றின் மேலே கட்டப்பட்டுள்ள கோவிலுக்கு ஏறிச் செல்ல, படிகள் உள்ளன. படிக்கட்டுகளைக் கடந்து சென்று உயரே இறைவனை தரிசிக்கும் அனுபவம், பல படிகளைக் கடந்துதான் உயர முடியும் என்ற வாழ்க்கை அனுபவத்தை நமக்கு உணர்த்தத்தானே?

கீழே இருந்து முதல் 10 படிகள் ஏறியதுமே விநாயகப் பெருமானின் சந்நிதி நம்மை வரவேற்கிறது. இங்கு வருபவர் வினையெல்லாம் தீர்ந்துவிடும் அச்சமில்லை, மேலே ஏறிச் சென்று ஈசனை வழிபடுங்கள் என்பதுபோல் ஆரம்பத்திலேயே அடிவாரத்தில் ஆனைமுகன் நம்மை எதிர்கொண்டு ஆசீர்வதிக்கிறார். அவரை வணங்கி,  ஆசிகளை வாங்கிக்கொண்டு சுமார் நூறு படிகளுக்கு மேல் கடந்து சென்றால் மேலே அற்புதமான கோவில்.


மலை மேலே வலுவான கோட்டையாக உய்யக்கொண்டான் திருமலைக் கோவில் திகழ்கிறது. ஆலயத்தில் ஐந்து பிரகாரங்கள் அமைந்துள்ளன. அவற்றைச் சுற்றி சுற்றுச் சுவரும் அதற்கு வெளியே ஆறு அடி கனமுள்ள வலிமையான மதில் சுவரும் கட்டப்பட்டுள்ளன.

உள்ளே ஆலயத்தில் ,மேற்கு நோக்கி சிவபெருமான் சந்நிதி அமைந்துள்ளது. மூலவருக்கு உஜ்ஜீவனேஸ்வரர் என்று திருநாமம். தூய தமிழில் உச்சிநாதர் என்று அழைக்கப்படுகிறார். வாழ்வில் மேலான நிலைமையை அடைய, வாழ்வின் உச்சியை அடைய நமக்கு அருள்பவர் என்று இதற்குப் பொருள். நாம், வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து மேலான முக்தி நிலையை அடைவதற்கு வழிகாட்டுபவர் என்றும் பொருள்.


மேலும் பக்தர்களை அன்பினால் ஆட்கொள்பவர் என்பதால் உய்யக்கொண்டான் திருமலையில் அருளாட்சி செய்யும் சிவபெருமான், ஆளுடையார் என்றும் அழைக்கப்படுகிறார். சிவபெருமான் சந்நிதி உள்பிரகாரத்தில் உள்ள கோஷ்டத்தில், கிழக்கு நோக்கி லிங்கோத்பவர் அல்லது மஹா விஷ்ணு இருப்பது வழக்கம். ஆனால் இங்கே வித்தியாசமாக பெண்ணுக்கு சரிபாதி தந்தவராய், அர்த்தநாரீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.

உய்யக்கொண்டான் ஆலயத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இங்கே அம்பாளுக்கு இரண்டு சந்நிதிகள். கிழக்கு நோக்கி இருக்கும் சந்நிதியில் அம்பாளுக்கு அஞ்சனாக்ஷி என்று திருப்பெயர். தூய தமிழில் இதற்கு மைவிழியாள் என்று பொருள். கண்களுக்கு மை தீட்டிய அந்தக் கருணைக் கடல், தமது ஒரு கண்ணால் பக்தர்களின் தீமைகளை அழித்து, மறு கண்ணால் நன்மைகளைப் பொழிகிறாள். மேற்கு நோக்கி இருக்கும் மற்றொரு சந்நிதியில் பாலாம்பிகா என்ற திருநாமத்துடன் அம்பிகை அருளுகிறாள்.


உய்யக்கொண்டான் திருக்கோவிலை 1,200 ஆண்டுகளுக்கு முன்பு நந்திவர்ம பல்லவன் என்ற பல்லவ மன்னன் கட்டியதாக வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதற்குப் பன்னெடுங்காலம் முன்பே இங்கே ஆலயம் இருந்ததாக புராணங்கள் பகர்கின்றன. ராமாயண காலத்தில் ராவணனின் படைத்தளபதியாக இருந்த கரன் என்ற அரக்கன், இந்தக் கோவிலுக்கு வந்து சிவபெருமானை வழிபட்டு வரங்களைப் பெற்றதாக ஸ்தலவராலாறு கூறுகிறது.

மார்க்கண்டேய மகரிஷி 16 வயது நிறைவடையும் தருணத்தில் இங்கே வந்து வழிபட்டிருக்கிறாராம். 16 வயது நிறைவடைந்ததும் தனது உயிரை எமன் வாங்கிவிடுவான் என்ற காரணத்தால், தன்னைக் காப்பாற்றும்படி  உச்சிநாதரை மார்க்கேண்டேயர் மனமுருக வேண்டியிருக்கிறார். உடனே மனமிரங்கிய அம்பாள் சிவபெருமானை கேட்டுக்கொள்ள, மார்க்கண்டேய மகரிஷிக்கு சிரஞ்சீவியாக இருக்கும் வரத்தை இங்குதான் சிவபெருமான் வழங்கினாராம்.


ஆகையால் இங்கு வந்து உச்சிநாதரை வணங்குவோருக்கு எமபயம் நீங்கும் என்பது பக்தர்களின் பரிபூரண நம்பிக்கை. உய்யக்கொண்டான் திருமலையில் நாரதர், உபமன்யு போன்ற மகரிஷிகளும் சிவபெருமானை வழிபட்டுள்ளார்கள்.

வரலாற்று ரீதியில் நந்திவர்ம பல்லவ மன்னனால் கட்டப்பட்ட உய்யக்கொண்டான் திருமலைக் கோவிலுக்கு சோழ மன்னர்களும், பாண்டிய மன்னர்களும் நிறைய திருப்பணிகள் செய்திருக்கிறார்கள். குறிப்பாக பராந்தக சோழன், முதலாம் குலோத்துங்கச் சோழன் ஆகியோரின் கல்வெட்டுகளில் இந்தக் கோவில் பற்றிய குறிப்புகளும், அரசர்கள் செய்வித்த இறைப்பணிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.


முதலாம் குலோத்துங்கச் சோழன் காலத்துக் கல்வெட்டின் மூலம், இந்தக் கோவிலைச் சுற்றி ரதகாரர் என்ற தனி சமுதாயத்தினர் வாழ்ந்ததாகவும், கோவில் ரதங்களை வடிவமைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுவந்ததும் தெரியவருகிறது.

பிற்காலத்தில், மலைக்கோட்டையோடு அமைந்த உய்யக்கொண்டான் திருமலைக் கோவிலை கைப்பற்ற பிரஞ்சுப் படைகளும், பிரிட்டிஷ் படைகளும் மோதியுள்ளன. சிறிது காலம் பிரஞ்சுக்காரர் வசமிருந்த இந்தக் கோவிலைக் கைப்பற்ற பிரிட்டிஷ் படையினர், மேஜர் லாரன்ஸ் என்ற தளபதியின் தலைமையில் கடும் சண்டை புரிந்துள்ளனர். அப்போது பிரிட்டிஷாரின் பீரங்கிக் குண்டுகளை இந்தக் கோவில் மதில் சுவர்கள் தாங்கி நின்ற வடுக்களை, இப்போதும் காணலாம்.


திருமலைநல்லூர் என்றும் அழைக்கப்படும் உய்யக்கொண்டான் திருமலை, தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலமாகும். சோழநாட்டு சைவத் திருக்கோவில்களில் நான்காவது ஆலயமாக இது சாற்றப்படுகிறது. அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோர் இந்தக் கோவிலைப் போற்றிப் பாடியுள்ளனர். கற்குடி மாமலையார் என்றே இங்குள்ள சிவபெருமானை தேவாரம் புகழ்கிறது. இதேபோல் பெரிய புராணத்திலும் இந்த ஸ்தலம் கற்குடி என்று குறிப்பிட்டு துதிக்கப்படுகிறது.

உய்யக்கொண்டான் திருமலைக் கோவிலின் ஸ்தல விருட்சம் வில்வ மரம். கோவில் புனித தீர்த்தமான ஞானவாவி, குன்றின் மேலேயே மலைக் கோட்டைக்குள் அமைந்துள்ளது.

தருமபுரம் ஆதீனத்தின் பராமரிப்பில் உள்ள இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதம், பிரம்மோத்சவ விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. திருச்சியில் இருந்து உய்யக்கொண்டான் திருமலைக்கு நகரப் பேருந்துகள் செல்கின்றன.


பீரங்கித் தாக்குதலுக்கும் நிலைகுலைந்து போகாமல் உய்யக்கொண்டான் திருமலைக் கோவில் நெடிதுயர்ந்து நிற்கிறது. அதுபோல் இங்கே வந்து வணங்கும் பக்தர்களும் வாழ்வில் எந்தப் பிரச்சினை வந்தாலும், உச்சிநாதர் அருளால் அதனை முறியடித்து, மேலான நிலையை அடைவார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

- பத்மன்

3 கருத்துகள்:

  1. படங்களும் அதனின் விளக்கங்களும் கோவிலை வலம் வர வைத்து விட்டது... நன்றி சார்...

    பதிலளிநீக்கு
  2. nanbaa rockfort picture poadakuudathu; utchipillaiyar temple actually called as gazette thayumaanava temple; dont confuse; otherwise called jayanthinathar maathruboodheswar just like., this is not utchchinaadhar ujjeevanaadhar is correct; pl edit; delete rockfort related pictures; pl use thiruchirappalli only; dont use thiruchy; bcz lord siva name thiruchchirappalli

    பதிலளிநீக்கு
  3. uraiyur panchchavarneswar patrium thayumanavarmatuvaarkuzhalammai patri seekram article publish pannunga

    பதிலளிநீக்கு