வெள்ளி, 30 நவம்பர், 2012

புத்திசாலி சிறுமி



முன்னொரு காலத்துல அண்ணன்-தம்பி ரெண்டு பேரு இருந்தாங்க. மூத்தவன் பேரு மூர்த்தி, பணக்காரன். இளையவன் பேரு இன்னாசி, ஏழை. ரெண்டு பேரும் ஒரு நாள் பக்கத்து ஊர்ல வருஷாவருஷம் நடக்கற குதிரைச் சந்தைக்குப் போனாங்க. மூத்தவன் ஆண் குதிரை ஒண்ணையும், இளையவன் பெண் குதிரை ஒண்ணையும் விக்கறதுக்குக் கொண்டு போனாங்க.


      வழியில இருட்டிப்போனதால சத்திரத்துல தங்கினாங்க. குதிரை ரெண்டையும் வாசல்ல தனித்தனித் தூணுல கட்டியிருந்தாங்க. விடிஞ்சபின்ன ரெண்டுபேரும் வெளில வந்து பார்த்தா ஆச்சர்யம்! மூணு குதிரை இருந்தது. அந்த மூணாவது குதிரை பெருசா இல்ல, சின்னூண்டு குட்டி. ராத்திரிலே பெண் குதிரை பிரசவிச்சது. அம்மா மடில பால் குடிச்சிட்டு முன்னங்கால தூக்கி கஷ்டப்பட்டு நடக்க முயற்சி பண்ணின அந்தக் குட்டி, ஆண் குதிரை பக்கமா தவழ்ந்து வந்தது. அதைப் பார்த்த ஆண் குதிரை அன்பா கனைச்சது. அந்த நேரம்தான் அண்ணன்-தம்பி ரெண்டு பேரும் வெளில வந்து மூணு குதிரையைப் பார்த்தாங்க.


      மூர்த்தி சொன்னான் “இந்தக் குட்டி என்னோடது. என் குதிரை பெத்தது.” இதைக் கேட்ட ஏழைத் தம்பி இன்னாசி சிரிச்சான். “ஆண் குதிரை எங்கனாச்சும் குட்டி போடுமா? இது என் பெண் குதிரையோடது” அப்படின்னான். ரெண்டு பேருக்கும் சண்டை முட்டிக்கிச்சு. வழக்கு பஞ்சாயத்துக்குப் போனது. ஒவ்வொரு வருஷமும் குதிரைச் சந்தை  தொடங்குற போதும், பஞ்சாயத்துல நீதிபதியா அந்நாட்டு ராசாவே இருக்கிறது வழக்கம். அதுனால இந்த வழக்கை ராசாவே விசாரிச்சாரு.


      அண்ணன்-தம்பி சச்சரவைக் கேட்டதுமே அவருக்கு விஷயம் விளங்கிப் போச்சு. தம்பியோடதுதான் அந்தக் குதிரைக் குட்டின்னு நியாயமா தீர்ப்பு சொல்ல நெனச்சாரு. அப்போப் பார்த்து கெட்ட நேரமோ என்னவோ, தம்பிக்காரனுக்கு திடீர்னு ஒரு கண்ணு துடிச்சது. அதப் பார்த்த ராசா, ஆகா! இந்த ஏழை, தனக்கு சாதகமா தீர்ப்பு சொல்லுன்னு கண்ண சிமிட்டறானேன்னு நெனச்சாரு.

      மரியாதை தெரியாத இந்தப் பயல தண்டிக்கனும்னு தீர்மானிச்சாரு. அதனால “இந்த வழக்கு ரொம்ப சிக்கலா இருக்கு. இதுக்குத் தீர்ப்பு சொல்றது முடியாத காரியம்னு நெனக்கிறேன். அதுனால நான் நாலு புதிர் போடறேன். அதுக்கு யாரு பதில் கண்டுபிடிச்சிட்டு வர்றாங்களோ அவங்களுக்குத்தான் குதிரைக் குட்டி சொந்தம்” அப்படின்னு சொன்னாரு. “உலகத்திலேயே மிக வேகமானது எது? கொழுப்பு நெறைஞ்சது எது? மிருதுவானது எது? மேலும் விலை மதிக்க முடியாத உசத்தியானது எது?” அப்படிங்கற நாலு புதிரையும் சொன்னாரு.



      வர வழியில மூர்த்தி யோசிச்சான். அடடா, இந்தப் புதிருங்களுக்கு நம்மால பதில் சொல்ல முடியாதே? பதில் சொன்னாத்தானே குதிரைக் குட்டிய வாங்க முடியும்? அப்ப திடீர்னு அவனுக்கு ஒரு நெனப்பு தட்டிச்சு. அவன்கிட்ட கடன் வாங்கியிருந்த காய்கறிக்காரி சிரிக்கச் சிரிக்கப் பேசுவா, சாமர்த்தியக்காரின்னு கூட சில பேரு சொல்லுவாங்க. அவகிட்டப் போனான் மூர்த்தி. நாலு புதிருக்கு விடை சொன்ன கடன்ல ஒரு பகுதியை கழிச்சிக்கறேன்னு சொன்னான். அவ, தான் எவ்வளவு சாமர்த்தியக்காரின்னு அப்போ நிரூபிச்சா. கடன் முழுசையும் தள்ளுபடி செஞ்சா விடை சொல்றேன்னா.

      மூர்த்தி சரின்னதும், குசும்பு பிடிச்ச அந்தக் காய்கறிக்காரி, உலகத்துலேயே ரொம்ப வேகமானது என் புருஷனோட கோவேறுக்கழுதை, போன வருஷம் ஓடிப்போனது இன்னும் அது அகப்படலே. ரொம்பக் கொழுப்பு நெறஞ்சது எங்க வீட்டு எருமை மாடுதான். அதோட பாலுல எவ்வளவு தண்ணி கலந்தாலும் கெட்டியா இருக்கும். ரொம்ப மிருதுவானது என் மெத்தைல இருக்கிற குயில் இறகு. ரொம்ப உசத்தியானது என் தம்பியோட ஒரு வயசுக் கொழந்தை. உலகத்துல உள்ள தங்கத்தைக் கொட்டிக் கொடுத்தாலும் என் மருமகனை விட்டுத்தர மாட்டேன் அப்படின்னு அவ சொன்னா.

      இதே போல வீட்டுக்கு சோகமா திரும்பின இன்னாசியைப் பார்த்து அவனோட அஞ்சு வயசு மக, “என்னப்பா விஷயம்”னு கேட்டா. மகளைவிட்டா வேற ஆதரவு இல்லாத அவன் நடந்ததைச் சொல்லி ராசாவோட நாலு புதிரையும் சொன்னான். ஏழையோட மக, அவளோட  வயசையும் மிஞ்சின புத்திசாலி.


      “அப்பா, கவலைப்படாத. நான் பதில் சொல்லறேன். அதைப்போய் ராசாட்ட சொல்லு. உலகத்துலேயே ரொம்ப வேகமானது வடக்குப் பக்கத்துலேர்ந்து வீசற வாடைக்காத்து. ரொம்ப கொழுப்பு உள்ளது, பயிர் விளையிற நிலம். ஏன்னா அதுல விளையற பயிர்களை தின்னுட்டுதான் மிருகங்களும், மனிஷங்களும் பலம் ஆகிறோம். உயிர் வாழறோம். உலகத்துலேயே மிருதுவானது குழந்தையோட ஸ்பரிசம். மிக உசத்தியானது நேர்மை” அப்படின்னு பதில் சொன்னா.

                புதிருக்கு விடை சொல்ல சகோதரர்கள் ரெண்டு பேரும், ராசாவோட அரண்மனைக்குப் போனாங்க. மூத்தவன் பதில்களைக் கேட்டதும் ராசாவும், பிரதானிகளும் விழுந்து விழுந்து சிரிச்சாங்க. இளையவன் பதில் சொன்னதும் ராசாவோட முகத்துல ஈயாடலே. இவ்வளவு புத்திசாலித்தனமா சொல்லிட்டானேன்னு அவரு முகத்துல எள்ளும் கொள்ளும் வெடிச்சது. அதுவும் உலகத்துலேயே உசத்தியானது நேர்மைன்னு நாலாவது புதிருக்கு பதில் சொன்னபோது ராசா முகம் கறுத்துப்போச்சு. ஏழைக்கு அதுவரை நியாயம் கிடைக்காம நாமதான் ஏமாத்திட்டு இருக்கோம்னு அவரோட மனசாட்சி உறுத்தினாலும், அவைக்கு முன்னால தன் தப்ப ஏத்துக்க அவரால முடியலே.


      ”யார் உனக்கு இந்த பதில்களைச் சொன்னது?” உறுமினாரு ராசா. தன்னோட அஞ்சு வயசு மகள்தான்னு இன்னாசி உண்மயைச் சொன்னதும், “இந்த சின்ன வயசுலே இவ்வளவு பெரிய புத்திசாலியா உன் மக இருக்கறதுக்கு கண்டிப்பா பரிசு தரணும். உன்னோட அண்ணன் உரிமை கொண்டாடற குதிரைக் குட்டியையும், அதோடு சேர்த்து ஆயிரம் வராகனும் உனக்குத் தரலாம். ஆனா.....” என்று சொன்ன ராசா சபையோரைப் பார்த்து கண்ணைச் சிமிட்டினார்.

      இன்னாசியைப் பார்த்து, “உனக்கு ஒரு வாரம் அவகாசம் தரேன். நீ உன் மகளோட இங்கு வரணும். உன் மக பெரிய புத்திசாலி இல்லையா? அதனால ஒரு சோதனை வைக்கறேன். உன் மக இங்க வரும்போது அம்மணமாகவும் வரக்கூடாது, ஆடை அணிஞ்சும் வரக்கூடாது; மிருகங்கள் மேல ஏறியும் வரக்கூடாது, நடந்தும் வரக்கூடாது; அவ எனக்குப் பரிசும் கொண்டு வரக்கூடாது, வெறும் கையோடவும் வரக்கூடாது. நான் சொன்னபடி உன் மக வந்த, உனக்கு குதிரைக் குட்டியும் பரிசும் உண்டு. இல்லேன்னா திமிரு பிடிச்ச உன்னோட தலைய சீவிடுவேன்” அப்படின்னு ராசா சொன்னாரு.


      சபையிலே இருந்தவங்களுக்கெல்லாம் ஒரே சிரிப்பு. ராசாவோட நிபந்தனையை இந்த ஏழை நெறைவேத்த முடியாதுன்னு நெனைச்சாங்க. கண்ணீரோட வீட்டுக்குத் திரும்பினான் இன்னாசி. அழுதுகிட்டே அவன் சொன்னத அமைதியா மக கேட்டா. “நாளைக்கே நாம அரண்மனைக்குப் போகலாம். ஒரு புறாவைப் பிடிச்சிட்டு வாங்க. அப்புறம் நான் சொல்லறபடி நீங்க செய்யுங்க. உங்களுக்குப் பரிசு நிச்சயம்” அப்படின்னு சொன்னா. மக சொன்னபடி அவமேல மீன் வலையால போர்த்தி, கூடைல வெச்சு அரண்மனைக்குத் தூக்கிட்டுப் போனான் இன்னாசி.

      ராசா சொன்னபடி இன்னாசியோட மக, அம்மணமாகவும் வரல, ஆடையும் உடுத்தல; மிருகங்கள் மேலயும் வரல, நடந்தும் வரல; அப்போ ராசா கேட்டாரு: “நான் சொன்ன மூணாவது நிபந்தனை என்னாச்சு? பரிசும் கொண்டு வரக்கூடாது, வெறும் கையோடவும் வரக்கூடாதே?’’. உடனே தன் கையில வெச்சிருந்த புறாவை ராசாவை நோக்கிப் பறக்க விட்டா அந்தப் பொண்ணு. அது அவர் கைல சிக்காம பறந்து போச்சு. இப்போ மூணுலயும் ஏழையோட மக ஜெயிச்சிட்டா.

      அப்பாவும் ராசாவுக்கு திருப்தி வரல. “உன் அப்பா உண்மையிலேயே ஏழையா? அவருக்கு இந்தக் குதிரைக் குட்டி வேணுமா”ன்னு கேட்டாரு. “ஆமாம். நாங்க ரொம்ப ஏழை. எங்க அப்பா, நதியில பிடிச்சிட்டு வர்ற முயலையும், மரத்துலேர்ந்து பறிச்சிட்டு வர்ற மீன்களையும் வெச்சுதான் நாங்க வாழறோம்” அப்படின்னா.


      ஹோஹோன்னு சிரிச்சாரு ராசா. “இவ்வளவுதானா உன் புத்திசாலித்தனம்? எங்கேயாவது ஆத்துல முயலும், மரத்துல மீனும் கிடைக்குமா?” அப்படின்னு கேட்டாரு. “உங்க ஆட்சில ஆண் குதிரை மட்டும் குட்டி போடும்போது, இது நடக்கக் கூடாதா?” அப்படின்னு பதிலுக்குக் கேட்டா சின்னப் பொண்ணு. இதைக் கேட்டதும் ராசாவும், மத்த எல்லாருமே சிரிச்சுட்டாங்க.

      இனியும் நாம வீராப்பு காட்டக் கூடாதுன்னு நெனைச்ச ராசா, சொன்னபடியே குதிரைக் குட்டியோட, ஆயிரம் வராகனும் கொடுத்து இன்னாசியையும் அவனோட மகளையும் வாழ்த்தி அனுப்பி வெச்சாரு. “என்ன இருந்தாலும் என் ராஜ்ஜியத்துலதான் இந்த மாதிரி புத்திசாலிக் குழந்தைகள் பிறக்க முடியும்”ன்னு மீசையை முறுக்கிக்கிட்டாரு ராசா.

-    பத்மன் 

செவ்வாய், 27 நவம்பர், 2012

ஹரஹர சிவசிவ



(இன்று (27.11.12) திருக்கார்த்திகை தினம் அண்ணாமலை தீபத்தையொட்டி எனது இந்தப் பாடலை பக்தர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்.)

ஹரஹரஹர சிவசிவசிவ அரஹரோஹரா
ஹரஹரஹர சிவசிவசிவ அரஹரோஹரா


கைலாசவாசா பக்தநிவாஸா
கௌரீப்ரபு கங்காதரா சந்த்ரசேகரா  (ஹரஹரஹர)

தீனதயாளா விஸ்வநாதா
அர்த்தநாரி கருணாகரா அம்ருதசாகரா (ஹரஹரஹர)



காமமாரகா காலமாரகா
சித்திதாதா முக்திதாதா சரணம்விதாதா (ஹரஹரஹர)

த்ரிஜோதிநேத்ரா த்ரிசூலதாரணா
த்ரிலோகநாதா ஞானகுரு த்ரிபுரதஹனா (ஹரஹரஹர)


நீலகண்டா நிர்மலரூபா
சரணமஹம் சரணமஹம் பரமேச்வரா (ஹரஹரஹர)

-    பத்மன்

சனி, 24 நவம்பர், 2012

Kasab, an another name of Kindness



(Don’t get anger on me. This is my ethical anger, outburst into satire, towards people who criticized execution of death penalty on Terrorist Ajmal Kasab.)

How many people born in the world fulfill their duties according to what their names stand for? Only few exceptions are there. Ajmal Kasab should be one of that Great Souls list. In Arab, Kasab means butcher and Ajmal means handsome. To give meaning to his own name, how Kasab executed slaughtering in a beautiful way!



As he thought butchering four legged creatures is not good for him, he massacred two legged species. Moreover, he thought butchering by sword is an obsolete method, hence he slaughtered by Machine Gun, a most modern weapon.

Ajmal Kasab was a greatest instrument delivered by Almighty, to cut down the huge Indian population. Alas! Because of our (Indian) security personnel’s foolishness, other Ahimsa Lords sent by God along with Kasab were eradicated. Ajmal Kasab alone saved.



Is this not our duty, an incomparable soul like Kasab should be kept in a sophisticated prison cell with providing him Chicken, Mutton Briyani etc. for lifelong period?  Are we not giving hospitalities like these, to Afsal Guru, our Indian Terrorist? Was a separate treatment for abroad terrorist a just?

Was this not our duty to adopt Kasab, a generous man abandoned by his own country, Pakistan?  Instead, we produced him before Justice, and gave all legal assistances led him only to hang?

Okay. Shouldn’t we satisfy with the proclamation of Death Penalty? Why that execution? Didn’t we adopt a stand with generosity, only to proclaim death penalty and let the convicted to die in a natural way, in lot of cases? Why this barbaric attitude only towards Kasab? Was a compassionate man like Kasab fit to get Death Penalty, for took a brutal weapon and massacred more than hundred persons?




Kasab submitted mercy petition to President, only to get a thing (mercy) which he doesn’t has. Was his mercy petition a thorn shrub? Why the President rejected it? Doesn’t he know the art of indecisiveness?

Are they not hearing the roar of intellectuals that death penalty is not fit for refined society? Yes. Men like Terrorists and Cruel Killers having the birth right to massacre fellow humans and this is their bounding duty also. Is this a punishable crime with death penalty, to fulfill this right and duty?




Not a death penalty, even a life penalty should not be given to Kasab. As victims, is this not our duty to honor Kasab, A man with Supreme Motto of Massacre? Today onwards, we should avoid giving death or life penalty to great men like these, to memorize the bountiful act of Kasab. It may be good to announce a Great Terrorist Award in the name of Ajmal Kasab.

-          PADMAN





கருணைக்கு மறுபெயர் கசாப்




(பயங்கரவாதி அஜ்மல் கசாப்புக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனையைக் கூட சிலர் விமர்சிப்பதைப் பார்த்து எழுந்த அறச்சினத்தால் உருவான அங்கத (satire) கட்டுரை இது.)


உலகத்தில் தோன்றிய எத்தனை மனிதர்கள், தங்களது பெயருக்குப் பொருத்தமாய் நடந்து கொண்டிருக்கிறார்கள்? அப்படி நடந்துகொண்ட புண்ணிய மகான்களில் ஒருவர்தான் அஜ்மல் கசாப். கசாப் என்ற அரபு வார்த்தையின் பொருள், கால்நடைகளை வெட்டுபவர். அஜ்மல் என்றால் அழகு என்று அர்த்தம். கால்நடைகளை வெட்டும் குலத்தில் அவதரித்த இவர்தான் அந்தச் செயலை எத்தனை அழகாகச் செய்திருக்கிறார்?


நான்கு கால் ஜீவன்களைக் கொல்வது நமக்கு அழகல்ல என்று, இரண்டு கால் ஜீவன்களை அல்லவா அஜ்மல் கசாப் கொன்று தள்ளி இருக்கிறார். அதுவும் வெட்டுவது பழமையான பத்தாம்பசலித்தனம் என்பதால், நவீன கொலைக்கருவியான துப்பாக்கியைக் கொண்டு, காக்கை குருவிகளைச் சுடுவதுபோல் படபடவென சுட்டுத் தள்ளியுள்ளாரே?


இந்தியாவின் ஜனத்தொகையை குறைப்பதற்காக இறைவன் அனுப்பிவைத்த அற்புதக் கருவி அல்லவா அஜ்மல் கசாப்! நமது பாதுகாப்புப் படையினரின் முட்டாள்தனத்தால், இவரோடு பாகிஸ்தானில் இருந்து இங்கே வந்து, மக்கள்தொகையைக் குறைக்கும் மகத்தான பணியில் ஈடுபட்ட மற்ற அஹிம்சா மூர்த்திகள் அநியாயமாய் உயிரிழக்க, இவர் மட்டும்தானே நமக்கு முழுசாகக் கிடைத்தார்.


அப்பேர்பட்ட சிறப்பு வாய்ந்த கசாப்பை காலாகாலத்திற்கு சிறை என்ற பெயரிலே உல்லாசமாய் தங்கவைத்து, வேண்டுகின்ற அளவுக்கு பிரியாணி இத்யாதிகளை வழங்கி போற்றிப் பாதுகாப்பது அல்லவோ நமது கடமை? நமது நாட்டு அப்சல் குருவுக்கு அப்படித்தானே உபசரிக்கிறோம்? அயல்நாட்டில் இருந்து வந்ததால் அஜ்மலுக்கு தனி நீதியா?

எங்கள் நாட்டைச் சேர்ந்தவர் அல்ல என்று தாய்நாடான பா(க்)கிஸ்தானே கைகழுவிவிட்ட இந்த துர்பாக்கியசாலியான உத்தமரை நாம் அல்லவோ தத்து எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்? அதற்குப் பதில், சட்டத்தின் முன் நிறுத்தி, நாமே வழக்கறிஞரையும் அமர்த்தி வாதாடி, மரண தண்டனையை  அல்லவோ வழங்கி விட்டோம்?


சரி, மரண தண்டனையை அறிவித்ததோடு திருப்திபட்டால் போதாதா? எத்தனைப் பேருக்கு தீர்ப்பு வழங்கிய கையோடு இந்தப் பிரச்சினையை மறந்துவிட்டு, இயற்கையே அதன் கடமையை நிறைவேற்றட்டும் என்று பெருந்தன்மையாக விட்டு விட்டோம்? கசாப்பிடம் மட்டும் ஏன் இந்த காட்டுமிராண்டித்தனம்? துப்பாக்கியை கையில் எடுத்த அப்பாவி அஜ்மல் கசாப்பின் கழுத்திலே தூக்குக் கயிற்றை மாட்ட எத்தனை நெஞ்சழுத்தம்?



அப்பாவி இந்தியர்களிடம் தனக்கு இல்லாத கருணை, தனக்காவது கிடைக்கட்டுமே என்ற நினைப்பில், போனால் போகிறது என்று பெரிய மனதுடன் குடியரசுத்தலைவரிடம் கருணை மனு சமர்ப்பித்தாரே கசாப்?  அவரது கருணை மனு என்ன கருணைக் கிழங்கோ, தொட்டால் கை அரிக்கும் என்று தள்ளுபடி செய்துவிட்டார்களே? கருணை மனுவை கண்டும் காணாதபடி, எந்த முடிவும் எடுக்காமல் கமுக்கமாக இருக்கும் கலையையாவது பின்பற்றி இருக்கலாமே?

மரண தண்டனை, நாகரீகம் நிறைந்த மக்கள் சமுதாயத்திற்கு ஏற்புடையது அல்ல என்று அறிவுசீவிகள் கர்ச்சிப்பது இவர்கள் காதில் விழவில்லையா? தீவிரவாதிகளாகவும், கொடூரக் கொலையாளிகளாகவும் மாறியவர்கள், மக்களைக் கொன்று குவிப்பது அவர்களது பிறப்புரிமை, கண்டிக்கவும் கூடாத கட்டாயக் கடமை. அதனை நிறைவேற்றியதற்கு மரண தண்டனையா? இது அடுக்குமா?

திருமணம்கூட செய்துகொள்ளாமல், கொல்லுவது ஒன்றே குறிக்கோள் என்று வாழ்ந்த கொள்கைக் கோமான் கசாப். அந்த குணக்குன்றுக்கு மரண தண்டனை மட்டுமல்ல, ஆயுள் தண்டனைகூட விதித்திருக்கக் கூடாது. அவரது நினைவாக, இனிமேல் பயங்கரப் படுகொலைகள் செய்யும் தீவிரவாதிகளுக்கும், கொடூரக் கொலையாளிகளுக்கும் மரண தண்டனை, ஆயுள் தண்டனை வழங்குவதைத் தவிர்ப்போம். சமூகத்தில் இதுபோன்ற (பிறர் உயிர் போக்கும்) தியாகிகளை சாதாரணமாக நடமாடவிட்டு, சந்தோஷம் தொலைந்தாலும், சகல தோஷங்களும் நீங்கச் செய்வோம்.


-    பத்மன்

To read in English : Kasab, an another name of Kindness

செவ்வாய், 20 நவம்பர், 2012

ஓர் எழுத்தாளனின் இலக்கணப் பெயர்ச்சி



வல்லினமாய் வாழத்தான் ஆசைப்பட்டான்
மெல்லியலாளின்
இடையெழுத்தைக் கண்டதன்பின்
சார்பெழுத்துக்கள் பெருகிடவே
சற்றே தடம்மாறினான்.



புணர்ச்சி விதிக்கு ஆளாகி
உறுப்பிலக்கணம் ஆய்ந்ததால்
வாய்த்த வினைத்தொகை அது.



பகரணகரமகர ஓசை மிகவே
கொள்கையில் குறுக்கம் பெற்று
இலக்கணப் போலிக்குச் சுட்டானான்.


ஆசைகள் நீண்டு அடியுரம் அற்றுப்போய்
ஈரம்போய் இடையிலே சோரம்போய்
தன்பற்று இரட்டிப்பாகி
முன்னின்ற மெய்திரிந்து ஈனம்மிகுந்து
பண்புகளின் இயல்புகளின் விகாரப்பட்டான்.



அவனது சிந்தனையில் தற்குறிப்பேறியது
இரட்டுற மொழிதலுற்றான்
வேற்றுப்பொருள் வைத்ததும்
பிறிது மொழிதலானான்.


மொத்தத்தில் எடுத்துக்காட்டு உவமைக்கு ஆசைப்பட்டவன்
இறுதியில் இழிபொருள் உவமையானான்.


-    பத்மன்


புதன், 14 நவம்பர், 2012

நாடு உங்களுக்காக


(இன்று குழந்தைகள் தினத்தை ஒட்டி, நாளைய பாரதத் தலைவர்களுக்கு இந்தக் கவிதை மலர்)



ஏடு தூக்கிடும் பாலகரே
நாடு உமக்காய் இருக்கிறதே
தேடும் கல்வியின் துணையாலே
நாளும் நன்மைகள் செய்வீரே!



நோயால் மனிதர் வாடுகிறார்
நோவால் துயரப் படுகின்றார்
தாயாய் அன்பு காட்டிடுவீர்
தயவாய் மருத்துவர் ஆகிடுவீர்!



பசியால் மக்கள் வாடுகிறார்
பார்த்தே சும்மா இருப்பீரோ?
கசியும் நீரையும் சேமித்தே
கனிவாய் உழவு செய்திடுவீர்!



கல்வி அறியா பாமரர்கள்
கலங்கியே வாழ்வில் அஞ்சிடுவார்
கண்டும் காணாது இருப்பீரோ?
கருத்துடன் ஆசான் ஆகிடுவீர்!


நாட்டைக் கெடுக்கும் எதிரிகளும்
நம்மைச் சூழ்ந்தே இருந்திடுவார்
நடுங்கும் கோழையாய் நிற்பீரோ?
நல்ராணுவ வீரர் ஆகிடுவீர்!


உலகில் நாமும் உயர்ந்திடவே
உயர்வாணிகம் தானே துணையாகும்
பண்டம் யாவும் படைத்திடுவீர்
பலநாடுகள் சுற்றியே விற்றிடுவீர்!


புதுப்புதுத் தொழில்கள் பெருகிடவே
புத்தி விஞ்ஞானம் முக்கியமாம்
ஆற்றலில் நாடு சிறந்திடவே
அறிவியல் மேதை ஆகிடுவீர்!



எல்லா வளமும் இருந்தாலும்
நல்லோர் ஆட்சி வேண்டுமன்றோ?
வாழ்வே மக்கள் சேவைக்காய்
ஆளும் தலைவரும் ஆகிடுவீர்!


எந்தத் தொழில்நாம் செய்தாலும்
எல்லாம் தேசத் திருப்பணியாம்
சந்தித் தெருவும் பெருக்கிடுவோம்
சந்திரனுக் கும்போய் வருவோம்!

-    பத்மன்