திங்கள், 25 பிப்ரவரி, 2013

ஊடகர்கள்



யாருக்காகவோ வாள் சுழற்றுகிறோம்

சுழற்றலில் எங்கள் தலைகளும் வீழ்ந்துபடுகின்றன.


எய்பவர் கைகளில் அம்புகள் நாங்கள்

எளிய இலக்குகளையே குறிவைத்துத் துளைக்கிறோம்.


வலிய இலக்குகளுடன் எங்கள் தலைகள்மோதும்போது

வலிகள் அனைத்தும் எங்கள் உடம்புக்குத்தான்.


கருத்து மோதல்களுக்காக மடிந்து படுகிறோம் ஒருசிலர்

கன்னி தண்ணி பணத்துக்கும் மடிந்துவிடுகிறோம்.




உண்மையில் எங்கள் எசமானர்கள் பொதுசனங்கள்

உழலும் தொழில் நடைமுறையில் அவரிடமில்லை கரிசனங்கள்.


    

-    பத்மன்

வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

எப்படிப் புகழ்வேன்?



(அயல்நாட்டு இறக்குமதியான காதலர் தினத்தை ஆதரிக்காவிட்டாலும், ஆதிகாலம் தொட்டே, சிவன்-பார்வதி, முருகன்-வள்ளி, மன்மதன்-ரதி, கிருஷ்ணன்-ருக்மணி என நீடித்துவரும் காதலை, கனிந்த அன்பை ஆதரிப்பவன். ஆதலினால் இந்தக் கவிதை.)



என்ன காதலியடி நீயெனக்கு?
சூரிய முகமென்றால்
சுடவா செய்கிறேன் எனச்
சிணுங்குகிறாய்.




சந்திர வதனமென்றால்
தேய்ந்து மறைவதென்
தேகம் என்கிறாயா எனத்
தேம்புகிறாய்.





கருநாகக் கூந்தலென்றால், என்
கூந்தலின் மணம் என்ன
கடும் விஷமா என
விசும்புகிறாய்.



எப்படித்தான் புகழுவதோ
எனத் திகைத்து நின்றால்,
புகழ வக்கற்ற காதலனே!
நீயென்ன புலவன் எனப்
புலம்புகிறாய்.
என்செய்வேன்?

-    பத்மன்

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

பொருள் தரும் குறள்



வெந்ததைத் தின்று விதிவந்தால் சாவோம் என்று வாழ்வது வாழ்க்கையல்ல.  அதற்கு ஓர் அர்த்தம், பொருள் இருக்கிறது. வாழ்க்கை ஓர் அனுபவமாக இருக்கலாம், ஆனால் அதனை அனுபவிக்க சில அடிப்படை லட்சியங்கள் உள்ளன. பாரத மெய்ஞான மரபின்படி, வாழ்வின் புருஷார்த்தங்கள், அதாவது அடிப்படை நோக்கங்கள்- தர்மம் (அறம்), அர்த்தம் (பொருள்), காமம் (இன்பம்) மற்றும் மோட்சம் (வீடு).

இதில் முதல் மூன்றான அறம், பொருள், இன்பம் இது மூன்றும் முறையாக இருந்தால்தான் இறுதி இலக்காகிய வீடு (விடுதலை) கிடைக்கும். முக்தி என்பது, இறப்புக்குப் பின் அடைவது மட்டுமல்ல, இருக்கும்போதும் அனுபவிக்கக் கூடியதுதான். அறத்தைப் பின்பற்றி, அறத்தோடு பொருள் ஈட்டி, வாழ்க்கையின் இன்பங்களை அறத்தோடு அனுபவிக்கும்போது, தீமை, வறுமை, ஆசை முதலிய தளைகளில் இருந்து தானாகவே விடுதலை கிடைத்து விடுகிறது.

அதனால்தான் தமிழகத்தின் தெய்வப்புலவர் திருவள்ளுவர், அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் மொழியும் முப்பாலாகிய திருக்குறளைப் படைத்தார். இந்த முப்பாலிலேயே அப்பாலும் (வீடுபேறும்) அடங்கிவிடுகிறது. இதைத்தான் திருவள்ளுவர்,
“வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
 தெய்வத்துள் வைக்கப் படும்” (- குறள் 50)
என்று ஒரே குறளில் எடுத்துரைத்துள்ளார்.

இந்த உலகத்திலேயே வாழும் முறைப்படி வாழ்ந்துவிட்டால், வானில் உறைகின்ற தெய்வத்துக்கு இணையான நிலையைப் பெற்றுவிடலாம் என்கிறது திருக்குறள்.

மனிதனை தெய்வ நிலைக்கு உயர்த்தும் இந்த அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றில் மையமாக இருக்கும் பொருள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இறைவனையே ஈஸ்வரன் என்றுதான் அழைக்கிறோம். இதன் பொருள், அனைத்து ஐஸ்வர்யங்களையும், அதாவது பொருள் வளங்களையும் உடையவன் என்பதே. ஆக, வாழ்க்கைக்கு பொருள் அவசியமாகிறது. அதனைப் பொருட்படுத்தாமல் இருக்க முடியாது.

பர உலக வாழ்விற்கு அதாவது, இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாறுவதற்கு, மோட்சப் பெருவாழ்வு வாழ்வதற்கு, அறப்பண்புகளாகிய அருள் எவ்வாறு அவசியமோ, அதேபோல, இந்த மண்ணுலகில் இக வாழ்வை நன்கு வாழ்வதற்கு பொருள், அதாவது செல்வம் அவசியமாகிறது என்கிறார் திருவள்ளுவர். பொருளின் இந்தப் பெருமையை, அருளுடைமை என்ற அதிகாரத்தில் அவர் கூறியிருப்பது கூடுதல் சிறப்புடையது. அந்தக் குறள்:
     “அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருளில்லார்க்கு
       இவ்வுலகம் இல்லாகி யாங்கு.” (குறள் 247)


ஆகையால், பொருள் செல்வத்தைத் தேடுவதை வாழ்வின் லட்சியங்களில் ஒன்றாகக் கருதி, கடைபிடிக்க வேண்டும். பொருள்சார் விழிப்புணர்வு (financial awareness) அவசியம் என்பதை சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது பாரதம் முழங்கியிருக்கிறது. உலகின் முதல் பொருள் நூல் என்று வர்ணிக்கப்படும் அர்த்த சாஸ்திரம், நம்நாட்டு அறிஞர் சாணக்கியரால்தான் படைக்கப்பட்டது.

ஆயினும் ஒருகாலத்தில் பொருளாதார வல்லரசாகத் திகழ்ந்த இந்தியா, இன்று செல்வவளம் மிகுந்த நாடாக இல்லை. இதனை ஏழைநாடு என்று சொல்வதைவிட ஏழைகள் மிகுந்த நாடு என்றுதான் சொல்ல வேண்டும். இந்த ஏழ்மை நிலையில் இருந்து விடுபட ஒவ்வொருவரும் தமது பொருள்வளத்தைப் பெருக்கிக் கொள்வது அவசியம். இதனை, அர்த்த சாஸ்திரத்திற்கு இணையான பழந்தமிழ் இலக்கியமான திருக்குறள் இவ்விதம் எடுத்துரைக்கிறது:
     “பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
       பொருளல்ல தில்லை பொருள்.” (குறள் 751)

அதாவது, ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும், பொருள்படுத்தக் கூடியவராக, மதிக்கப்படக் கூடியவராக மாற்றக் கொடிய சிறப்பு, பொருளை (செல்வத்தை) தவிர வேறு எந்தப் பொருளுக்கும் இல்லை. எவ்வளவு அழகான குறள்.


இன்னொரு குறளில், பொருள் சேர்க்க வேண்டியதன் அவசியத்தை,
     “இல்லாரை எல்லோரும் எள்ளுவர், செல்வரை
       எல்லாரும் செய்வர் சிறப்பு.” (குறள் 752)
என்று சற்று அதிரடியாகவே கூறுகிறார் திருவள்ளுவர். இதன் பொருள், ஏழைகள் அவமதிப்புக்கு உரியவர்கள் என்பது அல்ல. செல்வம் இருப்போரை வாழ்த்திப் போற்றுவதும், இல்லாதவரை எள்ளி நகையாடுவதும் உலக மக்களின் இயல்பு. ஆகையால் அதனைச் சுட்டிக்காட்டி, அனைத்து மக்களையுமே செல்வத்தைச் சேர்க்க வேண்டும் என்று தூண்டுகிறார் தெய்வப்புலவர்.

இவ்வாறு சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் நாட்டினர், குறிப்பாகத் தமிழர்கள், பொருளாதார வல்லமை உடையவர்களாகத் திகழ, திருவள்ளுவர் பல்வேறு யோசனைகளை, வழிமுறைகளை, அறிவுரைகளை மிக அருமையாக சின்னஞ்சிறு குறள் பாக்களில் எடுத்தியம்பியுள்ளார். “பொருள்” நிறைந்த அந்தக் குறள்களை உங்களுடன் அவ்வப்போது இனி தொடர்ந்து பகிர்ந்து கொள்கிறேன்.

    -    பத்மன்

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

வாசல் என்றும் வாழியவே!

(நடுநாயகமாய் அமர்ந்திருகிறார் கவிமாமணி வாசல் வசந்தப்பிரியன் )

(வாசல் என்ற கவிதை அமைப்பை பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிறுவிய வசீகரக் கவிஞர் கவிமாமணி வாசல் வசந்தப்பிரியன். மாதம்தோறும் முதல் ஞாயிறைக் கவிஞாயிறாய் புலரவைத்த அந்தப் புலவர், கடந்த மாதம் அமரரானார். மூவரசன்பேட்டை, நங்கநல்லூர், உள்ளகரம், மடிப்பாக்கம், ஆதம்பாக்கம் மட்டுமின்றி சென்னை முழுவதும் , ஏன் தமிழகம் முழுவதும் உள்ள கவிஞர்களை ஆதரித்த, ஊக்குவித்த அந்தக் கவிவேந்தருக்கு நினைவஞ்சலி செலுத்த, இன்று (03.02.2013) மூவரசன்பேட்டை வியாபாரிகள் சங்கக் கட்டட திருமண மண்டபத்தில் வாழ்த்தரங்கம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அன்னாரின் நினைவைப் போற்றி அடியேன் படைத்தளித்த கவிதையை இங்கே காணிக்கை ஆக்குகிறேன்.)


இல்லத்தின் வரவேற்பு வாசலென்பார் நல்ல
உள்ளத்தின் வரவேற்பு வாசல் அமைப்பேயாம்
பள்ளத்தில் பாய்ந்துவரும் நீர்விசைபோல் அன்பு
வெள்ளத்தால் தமிழ்வளர்த்தார் வசந்தப் பிரியனிவர்.

சொல்லெல்லாம் வெல்லமென தித்திக்கும் இவர்பேச்சு
இன்றெல்லாம் கேட்டாலும் தெவிட்டாதே இவர்கவிதை
நன்றெல்லாம் நவின்றிடுமே நானிலத்தில் இவர்கருத்து
வென்றெடுத்த நமைவிடுத்துப் போனதைய்யோ இவர்மூச்சு.


மூவரசன் பேட்டையிதை தமிழரசன் கோட்டையென
நாவரசன் அவரமைத்துக் கவிரசமே பருகவைத்தார்
நவரசமும் முகம்தேக்கி பரவசமாய் கவிபொழியும்
அவர்வசமாய் நாமிருக்க, அவசரமாய் போனாரே!

கவிஞர்கள் ஒருபோதும் சேர்ந்திருக்க மாட்டார்கள்
கசப்பான உண்மையிதைக் கசக்கியே எறிந்தவராம்
உவப்பாக மாதத்தின் முதல்கதிர் தினத்தன்று
தவமாக நமையிணைத்த தகையாளர் மறைந்தாரே!





தமிழ்க்கோட்டை வாசலிது தமிழாண்ட தலைவன்
புகழ்க்கோட்டை வாசலிது ஒருபோதும் மூடாது
வசந்தத்தை அரவணைத்து வாசமிகு தமிழ்க்கவிதை
வார்த்திட்ட வாசலிது என்றென்றும் வாழியவே!

        -    பத்மன்