(சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த தின
விழாவை முன்னிட்டு இந்தக் கட்டுரை.)
சமீபத்தில் சுவாமி விவேகானந்தரைப் பற்றி ஹிந்து ஆங்கில நாளிதழ் கட்டுரையில் (Taking the Aggression
out of Masculinity by Sanjay Srivatsava, Anthropologist – Jan. 3) வெளியாகியுள்ள கருத்து, அபத்தத்தின்
உச்சகட்டம். சுவாமிஜியின் ஆண்மைமிகு தோற்றம், இந்திய ஆணாதிக்கக் கலாச்சாரத்தின்
அடையாளமாம். தேசியம் என்ற பெயரில் அது சகித்துக்கொள்ளப்பட்டதோடு, போற்றி வளர்க்கவும்பட்டதாம்.
கோணல் புத்தி என்பதற்கு நேர் எடுத்துக்காட்டு, இந்த வாதம்தான்.
ஆண்கள் தங்கள் சுயநலத்துக்காக வெளிவேஷத்தோடு காட்டும் பரிவு பெண்களுக்கு அவசியமில்லை
என்றும், மாதர்குலம் தம்மைத்தாமே பலவீனர்கள் என்று நினைப்பதை விட்டொழித்து மன
மற்றும் ஆன்ம பலத்தோடு உலக வாழ்க்கையை அணுகவேண்டும் என்றும் உண்மையான அக்கறையோடு
உபதேசித்தவர் சுவாமிஜி. ஆனால் அரிதாரம் பூசிய போலிப் பெண்ணியவாதிகள் ஆண்மை என்றால்
என்ன? பெண்மை என்றால் என்ன? என்பதன் உள்ளர்த்தத்தை
உணர்ந்துகொள்ளாமல் மனம்போன போக்கில் மண்வாரித் தூற்றுகிறார்கள்.
ஆண்மை என்பது ஆளும் திறன் - பிறரை மட்டுமல்ல, தன்னையும் அடக்கி ஆளும் திறன்.
அதேபோல் பெண்மை என்பது பேணும் கலை - தன்னை மட்டுமல்ல, பிறர் நலனையும் பேணும் கலை. ஆணுக்குள்
பெண்மையும், பெண்ணுக்குள் ஆண்மையும் புதைந்து கிடக்கிறது. இதுதான் அர்த்தநாரீஸ்வர
தத்துவம். நவீன விஞ்ஞான ஆய்வுக் கருத்துகளும், இந்தத் தத்துவத்தைத்தான் வேறு
வார்த்தைகளில் மொழிகின்றன.
“பெண்மை
வாழ்கவென்று கூத்திடுவோமடா” என்றும், “ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வோம்
இந்த நாட்டிலே” என்றும் ஆனந்தக்
கூத்தாடியவர் மகாகவி பாரதி. அவரே, பாஞ்சாலி சபதத்தில், துரியோதனன் அவையில்
பாஞ்சாலிக்கு நேர்ந்த அவமானத்தை அவையோர்கள் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த
கையாலாகாத்தனத்தை எடுத்துரைக்க “சீச்சீ பெட்டைப் புலம்பல்” என்று கூறியிருக்கிறார்.
இதனால் பாரதியை ஆணாதிக்கவாதி என்று கூறிவிட முடியுமா?
தற்காலத்து பெண்ணியவாதிகள் அப்படித்தான் கூறுவார்கள் போலும். பெண்மையைப்
போற்றிய பாரதி ஏன் ஆண்மையின் அடையாளமாக மிகப் பெரிய மீசை வைத்திருந்தார்? என்றுகூட
கேள்வி கேட்பார்கள், இந்தப் போலிப் பெண்ணுரிமைவாதிகள்.
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று பெண்ணடிமைத்தனம் கோலோச்சிக்கொண்டிருந்த
காலத்தில், “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள்
நடத்தவந்தோம்” என்று தன்னையே பெண்ணாக பாவித்துக்கொண்டு, உண்மையான பெண் சுதந்திரம்
போதித்தவர், மகாகவி பாரதி. அவர் இப்படிப்பட்ட பெண்கள் முன்னேற்றப் புரட்சிக்காரராக
உருவானதற்கு ஒருவகையில் சுவாமிஜிதான் காரணம்.
1905-ல் வாராணசியில் (காசியில்) நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்குச் சென்ற மஹாகவி
பாரதி, டம்டம் நகரில், சுவாமிஜியின் சீடர் சகோதரி நிவேதிதாவைச் சந்தித்தார். அப்போது மனைவியை அழைத்துவரவில்லையா? என்று
சகோதரி நிவேதிதா கேட்க, பெண்பிள்ளைகளை இதுபோல் அழைத்து வரும் வழக்கம் இல்லை என்று
பதில் கூறியிருக்கிறார் பாரதி. அப்படியானால், நீங்கள் கேட்கும் தேச சுதந்திரம்
எப்படிப் பூர்த்தியாகும்? என்று கேட்டார் சகோதரி நிவேதிதா. அப்போதுதான் மகாகவியின்
ஞானக்கண் விழித்தது. சகோதரி நிவேதிதையை தனது ஆன்மீக குருவாக ஏற்றார் மகாகவி
பாரதியார். அவரது பேச்சிலும், மூச்சிலும் தேச சுதந்திரத்தோடு, பெண் சுதந்திரமும்
புகுந்து கொண்டது. அந்தவகையில் சுவாமிஜிக்கு மகாகவி சீடர் வழிப் பேரப்பிள்ளை.
அப்பேர்பட்ட மகாகவி பாரதியார், “கற்பு நிலையெனச் சொல்லவந்தார் இருகட்சிக்கும்
இஃதைப் பொதுவில் வைப்போம்” என்று போதித்தார். இதன் உட்பொருள், பெண்களுக்கு
மட்டுமல்ல பிறன்மனை நோக்காப் பேராண்மை என்ற கற்பு ஆண்களுக்கும் அவசியம்
என்பதுதான். தற்காலத்து போலிப் பெண்ணியவாதிகள் மறைமுகமாகத் தூண்டிவிடுவதுபோல்,
ஆண்களில் சிலர் (பலர்?) பேணாத கற்பு, பெண்களுக்கு எதற்கு என்பதல்ல!
- - பத்மன்
என் கருத்து ஆண், பெண் இருவரும் சுதந்திரமாக
பதிலளிநீக்குஉலக வெளியில் வ்லம் வரலாம், ஆனால் மற்றவர்
வாழ்க்கை சுதந்திரத்தினை அஃது பாதிக்க கூடாது.
உன் வாழ்க்கை நன் வாழ்க்கையா ?
நன் வாழ்க்கையா ? நீயே முடிவெடு என்பதே
பாரதிக்கு நிவேதிதா சொல்லித்தெரிந்தது, சொல்லியும்
பலருக்கு தெரிய வில்லை,சொந்தமாயும் புரிய வில்லையே ? என் செய....ஆரா
Arumai
பதிலளிநீக்குArumai
பதிலளிநீக்கு