திங்கள், 1 ஜூலை, 2013

விடுதலை ஆற்றுப்படை



(ஶ்ரீ ஆதிசங்கரர் அருளிய நிர்வாண ஷட்கம் ஸ்லோகத்திற்கு எனது மொழிபெயர்ப்புக் கவிதை – பத்மன்)


மனம்புத்தி தன்னுணர்வு எண்ணம் நானல்ல
கேள்விசுவை முகர்வு பார்வையும் நானல்ல
விண்ணோ புவியோ தீயோவளி யோவல்ல
அறிவானந்த வடிவாம் சிவமேநான் சிவமேநான். 

மூச்சுக் காற்றுமல்ல ஐந்து வளியுமல்ல
மூலம் ஏழுமல்ல ஐந்து படிவுமல்ல
பேச்சுறுப் பல்லகைகால் பிறப்புறுப் புமல்ல
அறிவானந்த வடிவாம் சிவமேநான் சிவமேநான். 

விருப்புவெறுப் பில்லை பொறாமை மோகமில்லை
புகழ்பெருமை யில்லை பகையுணர் வுமில்லை
அறமில்லை பொருளில்லை காமமில்லை வீடுமில்லை
அறிவானந்த வடிவாம் சிவமேநான் சிவமேநான். 

பாவமில்லை புண்யமில்லை இன்பமில்லை துன்பமில்லை
மந்த்ரமில்லை தீர்த்தமில்லை வேதமில்லை வேள்வியில்லை
உண்பதில்லை உணவுமில்லை உண்பவனும் நானில்லை
அறிவானந்த வடிவாம் சிவமேநான் சிவமேநான். 
சாவுமில்லை ஐயமில்லை எனக்கு சாதிபேதமில்லை
தாயுமில்லை தந்தையிலை நான்பிறப் பதில்லை
உறவுமில்லை நட்புமில்லை குருவுமில்லை சீடனில்லை
அறிவானந்த வடிவாம் சிவமேநான் சிவமேநான். 

நான்மாறுபடு வதில்லை உருவமே துமில்லை
எங்கும்பரந் துள்ளநான் எதிலுமொட் டுவதில்லை
விடுதலை யென்பதில்லை விழைந்தறி வதுமில்லை
அறிவானந்த வடிவாம் சிவமேநான் சிவமேநான்.


6 கருத்துகள்:

  1. மொழிபெயர்ப்புக் கவிதை அருமை ஐயா... நன்றிகள்...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. எல்லாமே சிவமமயம் என்ற தத்துவத்தை உணர்த்தும் கவிதை அருமை ,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. sarvam sivamayam. om namasivaya...ethuvum illathathu... ellamumai irupathu. translate arumai. and simple

      நீக்கு
  3. நன்றி சுந்தரமூர்த்தி மற்றும் அனந்து.

    பதிலளிநீக்கு
  4. kavidhai mikka deiveegamaaga uLLadhu.
    Atma thrupthiyai aLikkiradhu.
    Anuppiyamaikku manamaarndha nandrigal.

    Mariyaadhaiyudan
    Sruthi.S.

    பதிலளிநீக்கு