கடினமாய்
உழைத்துத்தான்
குடும்பத்தைக்
காப்பாற்றும்
கஷ்டமான சூழலில்
கடவுளே என்னைநீ
வைத்துள்ளாய்.
ஆனாலும் உனக்கு நன்றி
இறைவா – அதனால்தான்
களைப்பு என்னிடம்
கழன்றுவிட்டது.
பதவிகளைப்
பிடித்து
பணம்அதிகம் பண்ணத்தெரியாத
பத்தாம்பசலி
மனிதனாய்
பகவானே என்னைநீ
வைத்துள்ளாய்.
ஆனாலும் உனக்கு நன்றி
இறைவா – அதனால்தான்
குணம் என்னிடம்
குடிகொண்டுள்ளது.
திறமைகள்
மிகுந்திருந்தும்
திருப்பங்களைக்
காணாமல்
திக்கற்று
நின்றிடவே
தெய்வமே என்னைநீ
வைத்துள்ளாய்.
ஆனாலும் உனக்கு நன்றி
இறைவா – அதனால்தான்
முயற்சி என்னிடம்
முளைத்துவருகிறது.
பாமாலைபாடி
பூமாலைசூட்டி
பலவிதமாய்
துதித்தும்
பலனேதும்
கிடைக்காதவனாய்
பரம்பொருளே
என்னைநீ வைத்துள்ளாய்.
ஆனாலும் உனக்கு நன்றி
இறைவா – அதனால்தான்
பக்தி என்னிடம்
பற்றிக்கொண்டுள்ளது.
- பத்மன்
முதலில் உள்ளது மிகவும் அருமை ஐயா...
பதிலளிநீக்குநன்றி...
அன்பு பத்மனுக்கு
பதிலளிநீக்குநன்றி உனக்கு, நல்ல கவிதைக்கு
என்றும் நன்புடன்
பார்த்தா