வெள்ளி, 20 ஜூன், 2014

நல்வாக்கு (சுபாஷிதம்)


தமிழில் மூதுரை, முதுமொழி, பழமொழி, ஆன்றோர்மொழி என்று இருப்பதைப்போல் சம்ஸ்கிருதத்தில் சுபாஷிதம் என்று உள்ளது. பல்வேறு பெரியோர்கள், அறிஞர் பெருமக்கள் கூறியதன் தொகுப்பு இந்த சுபாஷிதம். 

இந்த சுபாஷிதங்களில் பல, நேரடியாக சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டவையாகவும் ஒருசில, தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் உள்ள நல்ல கருத்துகளை அப்படியே மொழிபெயர்த்தோ அல்லது உள்வாங்கி மாற்றியமைத்தோ படைக்கப்பட்டவையாகவும் உள்ளன.

சு என்றால் நல்ல என்று, பாஷிதம் என்றால் மொழி, வாக்கு என்றும் பொருள். ஆகையால் தமிழில் இதனை நல்வாக்கு என்று சொல்லலாம். இந்த சுபாஷிதங்களில் சிலவற்றை தமிழ் கூறும் நல்லுலகு நண்பர்களுக்காக இங்கே மொழிபெயர்த்துத் தந்துள்ளேன்.

1) தானங்களால் கரங்களுக்கு அழகு
   மோதிரத்தால் அல்ல
  குளியலால் உடலுக்குத் தூய்மை
   வாசனாதிகளால் அல்ல
  உபசரிப்பால் உண்டாகும் நிறைவு
   விருந்தால் அல்ல
  ஞானத்தால் உண்டாகும் முக்தி
   சடங்குகளால் அல்ல.

2) இரவுக்கு நிலா அழகு
   இயற்கைக்கு கதிரவன் அழகு
   வாக்கினுக்கு உண்மை அழகு
   வாழ்க்கைக்கு நன்னடத்தை அழகு.

3) பிறருக்கு உதவவே மரங்கள் காய்க்கின்றன
   பிறருக்கு உதவவே நதியும் பாய்கிறது
   பிறருக்கு உதவவே பசுவும் சுரக்கிறது
   பிறருக்கு உதவவே நமக்கிந்த உடம்பும்.

4) பூச்சிகளுக்கு காற்றால் பயம்
   பூக்களுக்கு குளிரால் பயம்
   மலைகளுக்கு இடியால் பயம்
   மனிதருக்கு தீயோரால் பயம்.
  

  





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக