சனி, 24 நவம்பர், 2012

கருணைக்கு மறுபெயர் கசாப்




(பயங்கரவாதி அஜ்மல் கசாப்புக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனையைக் கூட சிலர் விமர்சிப்பதைப் பார்த்து எழுந்த அறச்சினத்தால் உருவான அங்கத (satire) கட்டுரை இது.)


உலகத்தில் தோன்றிய எத்தனை மனிதர்கள், தங்களது பெயருக்குப் பொருத்தமாய் நடந்து கொண்டிருக்கிறார்கள்? அப்படி நடந்துகொண்ட புண்ணிய மகான்களில் ஒருவர்தான் அஜ்மல் கசாப். கசாப் என்ற அரபு வார்த்தையின் பொருள், கால்நடைகளை வெட்டுபவர். அஜ்மல் என்றால் அழகு என்று அர்த்தம். கால்நடைகளை வெட்டும் குலத்தில் அவதரித்த இவர்தான் அந்தச் செயலை எத்தனை அழகாகச் செய்திருக்கிறார்?


நான்கு கால் ஜீவன்களைக் கொல்வது நமக்கு அழகல்ல என்று, இரண்டு கால் ஜீவன்களை அல்லவா அஜ்மல் கசாப் கொன்று தள்ளி இருக்கிறார். அதுவும் வெட்டுவது பழமையான பத்தாம்பசலித்தனம் என்பதால், நவீன கொலைக்கருவியான துப்பாக்கியைக் கொண்டு, காக்கை குருவிகளைச் சுடுவதுபோல் படபடவென சுட்டுத் தள்ளியுள்ளாரே?


இந்தியாவின் ஜனத்தொகையை குறைப்பதற்காக இறைவன் அனுப்பிவைத்த அற்புதக் கருவி அல்லவா அஜ்மல் கசாப்! நமது பாதுகாப்புப் படையினரின் முட்டாள்தனத்தால், இவரோடு பாகிஸ்தானில் இருந்து இங்கே வந்து, மக்கள்தொகையைக் குறைக்கும் மகத்தான பணியில் ஈடுபட்ட மற்ற அஹிம்சா மூர்த்திகள் அநியாயமாய் உயிரிழக்க, இவர் மட்டும்தானே நமக்கு முழுசாகக் கிடைத்தார்.


அப்பேர்பட்ட சிறப்பு வாய்ந்த கசாப்பை காலாகாலத்திற்கு சிறை என்ற பெயரிலே உல்லாசமாய் தங்கவைத்து, வேண்டுகின்ற அளவுக்கு பிரியாணி இத்யாதிகளை வழங்கி போற்றிப் பாதுகாப்பது அல்லவோ நமது கடமை? நமது நாட்டு அப்சல் குருவுக்கு அப்படித்தானே உபசரிக்கிறோம்? அயல்நாட்டில் இருந்து வந்ததால் அஜ்மலுக்கு தனி நீதியா?

எங்கள் நாட்டைச் சேர்ந்தவர் அல்ல என்று தாய்நாடான பா(க்)கிஸ்தானே கைகழுவிவிட்ட இந்த துர்பாக்கியசாலியான உத்தமரை நாம் அல்லவோ தத்து எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்? அதற்குப் பதில், சட்டத்தின் முன் நிறுத்தி, நாமே வழக்கறிஞரையும் அமர்த்தி வாதாடி, மரண தண்டனையை  அல்லவோ வழங்கி விட்டோம்?


சரி, மரண தண்டனையை அறிவித்ததோடு திருப்திபட்டால் போதாதா? எத்தனைப் பேருக்கு தீர்ப்பு வழங்கிய கையோடு இந்தப் பிரச்சினையை மறந்துவிட்டு, இயற்கையே அதன் கடமையை நிறைவேற்றட்டும் என்று பெருந்தன்மையாக விட்டு விட்டோம்? கசாப்பிடம் மட்டும் ஏன் இந்த காட்டுமிராண்டித்தனம்? துப்பாக்கியை கையில் எடுத்த அப்பாவி அஜ்மல் கசாப்பின் கழுத்திலே தூக்குக் கயிற்றை மாட்ட எத்தனை நெஞ்சழுத்தம்?



அப்பாவி இந்தியர்களிடம் தனக்கு இல்லாத கருணை, தனக்காவது கிடைக்கட்டுமே என்ற நினைப்பில், போனால் போகிறது என்று பெரிய மனதுடன் குடியரசுத்தலைவரிடம் கருணை மனு சமர்ப்பித்தாரே கசாப்?  அவரது கருணை மனு என்ன கருணைக் கிழங்கோ, தொட்டால் கை அரிக்கும் என்று தள்ளுபடி செய்துவிட்டார்களே? கருணை மனுவை கண்டும் காணாதபடி, எந்த முடிவும் எடுக்காமல் கமுக்கமாக இருக்கும் கலையையாவது பின்பற்றி இருக்கலாமே?

மரண தண்டனை, நாகரீகம் நிறைந்த மக்கள் சமுதாயத்திற்கு ஏற்புடையது அல்ல என்று அறிவுசீவிகள் கர்ச்சிப்பது இவர்கள் காதில் விழவில்லையா? தீவிரவாதிகளாகவும், கொடூரக் கொலையாளிகளாகவும் மாறியவர்கள், மக்களைக் கொன்று குவிப்பது அவர்களது பிறப்புரிமை, கண்டிக்கவும் கூடாத கட்டாயக் கடமை. அதனை நிறைவேற்றியதற்கு மரண தண்டனையா? இது அடுக்குமா?

திருமணம்கூட செய்துகொள்ளாமல், கொல்லுவது ஒன்றே குறிக்கோள் என்று வாழ்ந்த கொள்கைக் கோமான் கசாப். அந்த குணக்குன்றுக்கு மரண தண்டனை மட்டுமல்ல, ஆயுள் தண்டனைகூட விதித்திருக்கக் கூடாது. அவரது நினைவாக, இனிமேல் பயங்கரப் படுகொலைகள் செய்யும் தீவிரவாதிகளுக்கும், கொடூரக் கொலையாளிகளுக்கும் மரண தண்டனை, ஆயுள் தண்டனை வழங்குவதைத் தவிர்ப்போம். சமூகத்தில் இதுபோன்ற (பிறர் உயிர் போக்கும்) தியாகிகளை சாதாரணமாக நடமாடவிட்டு, சந்தோஷம் தொலைந்தாலும், சகல தோஷங்களும் நீங்கச் செய்வோம்.


-    பத்மன்

To read in English : Kasab, an another name of Kindness

செவ்வாய், 20 நவம்பர், 2012

ஓர் எழுத்தாளனின் இலக்கணப் பெயர்ச்சி



வல்லினமாய் வாழத்தான் ஆசைப்பட்டான்
மெல்லியலாளின்
இடையெழுத்தைக் கண்டதன்பின்
சார்பெழுத்துக்கள் பெருகிடவே
சற்றே தடம்மாறினான்.



புணர்ச்சி விதிக்கு ஆளாகி
உறுப்பிலக்கணம் ஆய்ந்ததால்
வாய்த்த வினைத்தொகை அது.



பகரணகரமகர ஓசை மிகவே
கொள்கையில் குறுக்கம் பெற்று
இலக்கணப் போலிக்குச் சுட்டானான்.


ஆசைகள் நீண்டு அடியுரம் அற்றுப்போய்
ஈரம்போய் இடையிலே சோரம்போய்
தன்பற்று இரட்டிப்பாகி
முன்னின்ற மெய்திரிந்து ஈனம்மிகுந்து
பண்புகளின் இயல்புகளின் விகாரப்பட்டான்.



அவனது சிந்தனையில் தற்குறிப்பேறியது
இரட்டுற மொழிதலுற்றான்
வேற்றுப்பொருள் வைத்ததும்
பிறிது மொழிதலானான்.


மொத்தத்தில் எடுத்துக்காட்டு உவமைக்கு ஆசைப்பட்டவன்
இறுதியில் இழிபொருள் உவமையானான்.


-    பத்மன்


புதன், 14 நவம்பர், 2012

நாடு உங்களுக்காக


(இன்று குழந்தைகள் தினத்தை ஒட்டி, நாளைய பாரதத் தலைவர்களுக்கு இந்தக் கவிதை மலர்)



ஏடு தூக்கிடும் பாலகரே
நாடு உமக்காய் இருக்கிறதே
தேடும் கல்வியின் துணையாலே
நாளும் நன்மைகள் செய்வீரே!



நோயால் மனிதர் வாடுகிறார்
நோவால் துயரப் படுகின்றார்
தாயாய் அன்பு காட்டிடுவீர்
தயவாய் மருத்துவர் ஆகிடுவீர்!



பசியால் மக்கள் வாடுகிறார்
பார்த்தே சும்மா இருப்பீரோ?
கசியும் நீரையும் சேமித்தே
கனிவாய் உழவு செய்திடுவீர்!



கல்வி அறியா பாமரர்கள்
கலங்கியே வாழ்வில் அஞ்சிடுவார்
கண்டும் காணாது இருப்பீரோ?
கருத்துடன் ஆசான் ஆகிடுவீர்!


நாட்டைக் கெடுக்கும் எதிரிகளும்
நம்மைச் சூழ்ந்தே இருந்திடுவார்
நடுங்கும் கோழையாய் நிற்பீரோ?
நல்ராணுவ வீரர் ஆகிடுவீர்!


உலகில் நாமும் உயர்ந்திடவே
உயர்வாணிகம் தானே துணையாகும்
பண்டம் யாவும் படைத்திடுவீர்
பலநாடுகள் சுற்றியே விற்றிடுவீர்!


புதுப்புதுத் தொழில்கள் பெருகிடவே
புத்தி விஞ்ஞானம் முக்கியமாம்
ஆற்றலில் நாடு சிறந்திடவே
அறிவியல் மேதை ஆகிடுவீர்!



எல்லா வளமும் இருந்தாலும்
நல்லோர் ஆட்சி வேண்டுமன்றோ?
வாழ்வே மக்கள் சேவைக்காய்
ஆளும் தலைவரும் ஆகிடுவீர்!


எந்தத் தொழில்நாம் செய்தாலும்
எல்லாம் தேசத் திருப்பணியாம்
சந்தித் தெருவும் பெருக்கிடுவோம்
சந்திரனுக் கும்போய் வருவோம்!

-    பத்மன்